பெட்ரோல் பங்குகளில் G-Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தம்?.. அதிர்ச்சி செய்தி!!
Petrol Bunk UPI Payment: சைபர் க்ரைம் புகார்களின் பேரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. முழு கணக்கையும் முடக்குவதற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய தொகையை மட்டும் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட் 12: இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பெட்ரோல் பங்குகளில் யூபிஐ மற்றும் கியூஆர் கோடு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
சைபர் க்ரைம் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் எவ்வித முன்அறிவிப்புமின்றி காவல் துறை மற்றும் வங்கிகளால் திடீரென முடக்கப்படுவதே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கப்படுவதன் பின்னணி:
ஆன்லைன் வழிப் பணமோசடிகளில் ஈடுபடும் நபர்கள், தாங்கள் திருடிய அல்லது மோசடி செய்த தொகையில் ஒரு சிறு பகுதியை (உதாரணமாக 500 அல்லது 1000 ரூபாயை) பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவதற்காக யூபிஐ மூலமாகச் செலுத்துகின்றனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளும்போது, அந்த மோசடிப் பணம் கைமாறிய வழியைக் கண்காணித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளைக் கண்டறிகின்றனர். ஆனால், காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் வங்கிகள், குறிப்பிட்ட அந்த சிறிய சந்தேகத்திற்குரிய தொகையை மட்டும் முடக்குவதற்குப் பதிலாக, லட்சக்கணக்கில் பணம் இருக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் முழு வங்கிக் கணக்கையும் முற்றிலுமாக முடக்கிவிடுகின்றன.
பங்க் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
தமிழ்நாட்டில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் கீழ் 5,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் தினமும் சராசரியாக 200 முதல் 500 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் பெட்ரோல் பங்குகளில் தினமும் ஈட்டப்படும் வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையானது ஆன்லைன் வழியிலேயே பெறப்படுகிறது. இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த வங்கிக் கணக்கும் முடக்கப்படுவதால் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பணம் செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமலும், அன்றாட வணிக நடைமுறைகளைத் தொடர முடியாமலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை:
பெட்ரோல் பங்கிற்கு எரிபொருள் நிரப்ப வரும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில் யார் நேர்மையானவர், யாருடைய டிஜிட்டல் பணம் மோசடியானது என்பதைத் தங்களால் சரிபார்க்க முடியாது என உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தும்போது, முழு வங்கிக் கணக்கையும் முடக்காமல், குறிப்பிட்ட அந்தச் சர்ச்சைக்குரிய தொகையை மட்டும் முடக்கி வைக்க வேண்டும் என்று காவல் துறைக்கும் வங்கிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..
மேலும், இதுகுறித்து மாநில அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட அனைத்து வகையான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.