மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி.. அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.. சட்டப்பேரவையில் முழங்கிய முதல்வர்!
Chief Minister M. K. Stalin : மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கொள்கையை நிலை நிறுத்த வேண்டும் என்றும் இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இன்று புதன்கிழமை 2- ஆவது நாளாக கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை திமுக கொண்டுள்ளது. தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு நமக்கு ஆதரவாக மத்திய அரசு அமையவில்லை. எனவே, இருக்கும் அதிகாரத்தின் மூலமே சமூக நீதி, கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றில் உட்கட்டமைப்பு வசதிகளில் முன்னேறி வருகிறோம். நில உரிமை மற்றும் நிதி உரிமைகளுக்கு இன்னும் தீவிரமாக போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமே வைத்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளை மதிப்பதில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் கொடுக்கும் இடத்தில் அவர்களும், வாங்கும் இடத்தில் நான் நம்மளும் இருக்க முடியும்.
மத்திய- மாநில உறவுகள் குறித்த அறிக்கை
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில உறவுகள் குறித்து உயர்நிலைக் குழுவின் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் பட்டியலில் உள்ள முக்கிய ஆதாரங்களை அடுத்தடுத்து மத்திய அரசு ஒத்திசைவு பட்டியலுக்கு மடைமாற்றி வருகிறது. மாநிலத்தில் கூட்டாட்சி வளர வேண்டும் என்பது தனிப்பட்ட அரசியல் கட்சியின் கோரிக்கை கிடையாது. இந்திய நாட்டு மக்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் முக்கியமான கோரிக்கையாகும். கூட்டாட்சி என்பது வாழ்வியல் உணர்வு. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சி தான் அடிப்படையாகும். இதுதான் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவி…மார்ச் 16- இல் மாநிலங்களவை தேர்தல்!




இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும். நாம் முயன்றால் மீண்டும் அரசமைப்பு சட்டத்தை மாற்ற முடியும். இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தொடங்க வேண்டும். அதிகாரமும், வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்து இருக்கக் கூடாது. அது பரவலாக்கப்பட வேண்டும். அது தொடர்பான சட்டப்பூர்வ வழிகளை இந்த அறிக்கையை நமக்கு வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவது இந்தியா ஒன்றியத்தை பலவீனப்படுத்தாது என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்
அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு கபளீகரம் செய்யும் சூழ்நிலையில் ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கும் நிலையில், இந்தி திணிப்பு, நிதி நெருக்கடி, தொகுதி மறுவரை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கெல்லாம் ஒரே மருந்து மாநில சுயாட்சி தான். இதனை அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக மட்டுமே அடைய முடியும். மாநிலங்கள் வளர்ந்தால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளரும் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக மத்திய – மாநில அரசு உறவு குறித்த அறிக்கையை முதல்வர் தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சருடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? தகுந்த நேரத்தில் அறிவிப்பு வரும் – பிரேமலதா விஜயகாந்த் சூசகம்..