பழனி கோவில் ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு.. அதிரடி விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி!
Palani Murugan Temple Land Case : பழனி தண்டாயுதபாணி கோவில் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில், பாரபட்சமின்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கோவில் நில முறைகேடு பத்திரப்பதிவில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான நபர்கள் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சந்தான லட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நில மோசடியில் கடும் நடவடிக்கை
இதில், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு மோசடி பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் பிரச்சனைக்கு உள்ளான அந்த இடத்தில் தற்போது வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகதாஸ் ரூ.2 கோடிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தில் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என். புதுரை சேர்ந்த சேதுபதி ஆகியோருக்கு கடந்த ஜூலை 6- ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க: ஊழல் மற்றும் முறைகேடு புகார்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்!!




பதிவாளர் – சார்- பதிவாளர் சஸ்பெண்ட்
இந்த பதிவை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மேற்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தைப் பெற்ற சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட பதிவுத்துறை விசாரணை மேற்கொண்டு பதிவுத்துறை அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நில முறைகேடு பதிவும் ரத்து செய்து உத்தரவு
இந்த முறைகேடு பதிவு தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நடைபெற்று வரும் நிலையில் நில பத்திரப்பதிவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த முறையே அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றக்கோரி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், பழனி முருகன் கோவில் நில முறைகேடு பத்திரப்பதிவு வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க: பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..