விஜயபாஸ்கர்களுக்கு சிக்கல்.. சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ADMK Resignation Dispute: தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது இயந்திரத்தனமாகச் சபாநாயகர் எடுத்த முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அதிமுக கொறடா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சட்டமன்றச் செயலாளர் மற்றும் இரு முன்னாள் அமைச்சர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை, ஜூலை 16: அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பேரவைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட இரு முன்னாள் அமைச்சர்களும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!!
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள்:
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கரும், கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். இருப்பினும், அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவைச் சட்டப்பேரவைச் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டு, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவித்தார்.
சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக மனு:
சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுகவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்த முக்கியக் குற்றச்சாட்டுகள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான தகுதி நீக்க நடவடிக்கை சபாநாயகரிடம் நிலுவையில் இருந்தது.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் ஒரு சூழலில், அதனைப் பரிசீலிக்காமல் அவர்கள் இருவரின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டது முற்றிலும் தவறானது. சபாநாயகர் இந்த விவகாரத்தில் தனது சுய புத்தியைச் செலுத்தாமல், இயந்திரத்தனமாக முடிவெடுத்து அரசியல் சாசனம் மற்றும் இயற்கை நீதி விதிகளுக்குப் புறம்பாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எனவே, இந்த வழக்கில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு, இறுதித் தீர்ப்பு வரும் வரை கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் (இடைத்தேர்தல் அறிவிப்பு போன்றவை) எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா?.. குதிரை பேர வழக்கு சிபிஐக்கு மாறுமா?.. தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம்!
உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு:
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குத் தொடர்பாகச் சட்டமன்றப் பேரவைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தரப்பில் உரியப் பதில்களை தாக்கல் செய்யுமாறு அதிரடி உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் முடிவு தவெகவில் இணைந்த இரு முன்னாள் அமைச்சர்களின் அரசியல் எதிர்காலத்திற்குப் புதிய சிக்கலை ஏற்படுத்துமா என்ற பரபரப்பை உருவாக்கியுள்ளது.