லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!!
TVK Leader Arrested: லஞ்சப் புகாரில் சிக்கிய செங்கல்பட்டு மாவட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, தாழம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டிலான சிமெண்ட் சாலை திட்டத்திற்கு ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, நடவடிக்கை பாய்ந்துள்ளது.
செங்கல்பட்டு, ஜூலை 16: செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளருமான வீராசாமி லஞ்சம் வாங்கிய புகாரில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு யாரும் எதிர்பாராத திருப்பமாக, தாழம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!
லஞ்சப் புகார் விவரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரரான நவீன் என்பவர், இதற்கான திட்டத் தொகையை அரசிடமிருந்து பெறுவதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை அணுகியுள்ளார்.
அப்போது, ஒப்பந்தத் தொகையை விடுவிப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி ரூ. 1.30 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி ஒப்பந்ததாரர் நவீன், கேட்கப்பட்ட லஞ்சப் பணத்தை வீராசாமியிடம் வழங்கியுள்ளார்.
இணையத்தில் வைரலான வீடியோ:
ஒப்பந்ததாரரிடம் வீராசாமி லஞ்சம் வாங்கும் காட்சிகள் மற்றும் கூகுள் பே மூலம் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவின. தூய்மையான அரசியலை முன்னிறுத்திச் செயல்பட முயலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவரே நேரடியாக லஞ்சப் புகாரில் சிக்கிய இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலையையும், பேசுபொருளையும் உருவாக்கியது.
தலைமை எடுத்த ஒழுங்கு நடவடிக்கை:
இந்த ஊழல் புகார் வீடியோ மற்றும் புகாராதாரங்கள் தவெக தலைமைக்குச் சென்றடைந்த உடனேயே, கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்தனர். கட்சியின் கொள்கைகளுக்கும், நற்பெயருக்கும் முற்றிலும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதைக் கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட இணைச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் வீராசாமி உடனடியாக நீக்கப்படுவதாக தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் இவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டது.
தாழம்பூர் போலீசாரால் கைது:
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் நவீன் அளித்த அதிகாரப்பூர்வப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தாழம்பூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். லஞ்ச வீடியோ மற்றும் பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் உறுதியானதை அடுத்து, வீராசாமியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும் படிக்க: இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்.. குறுக்கே சென்ற மாமியார்- மருமகள் நேர்ந்த துயரம்.. புதுக்கோட்டையில் பெருஞ்சோகம்!
கைது செய்யப்பட்ட அவர் திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவரை வரும் ஜூலை 29ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வீராசாமி தற்போது செங்கல்பட்டு மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.