தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!
Thoothukudi Worker Murder 5 Arrested : தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளியை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக தலைமறைவாக இருந்து வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர், தினேஷ் நகரை சேர்ந்தவர் சேகர் ( 40 வயது). இவர், மாதா நகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 13- ஆம் தேதி இரவு மாதா நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தில், தாளமுத்து நகர் விவேகானந்தா நகரை சேர்ந்த முருகன் மகன் சச்சின், இதே பகுதி மேல அழகாபுரியை சேர்ந்த மாரியப்பன் மகன் அஜய், மாதா நகரை சேர்ந்த அமல்ராஜ் மகன் நாகராஜ், சுடலையாபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் மகன் சுதன், தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக்கில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட தொழிலாளி
சம்பவத்தன்று இரவு 3 வாலிபர்கள் மது போதையில் ஒரே பைக்கில் வேகமாக வந்தனர். இதை பார்த்த சேகர் அவர்களிடம் குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவில் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என கேட்டு கண்டித்துள்ளார். இதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அந்த வாலிபர்களை சேகர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. உடனே, அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனால், தாக்குதலுக்குள்ளான அந்த வாலிபர் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றார்.
மேலும் படிக்க: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. அதிரடி விளக்கம்!!




தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்
அங்கு, பேசிக் கொண்டிருந்த சேகரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. உடனே, அங்கிருந்து அவர்கள் சேகரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சேகர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
5 பேரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்
இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலை வீசி தேடி வந்தனர். இதில், தொடர்புடைய 5 பேரும் குறிப்பிட்ட இடத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களை சுற்றி வளைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..