லஞ்ச புகாரில் சிக்கிய செங்கல்பட்டு தவெக நிர்வாகி.. கட்சி தலைமை அதிரடி ஆக்ஷன்.. தூக்கி அடிக்கப்பட்ட வீராசாமி!
Chengalpattu TVK Secretary Expelled : தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் வீரா லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி கட்சியின் மாவட்ட செயலாளர் தீனா உத்தரவிட்டுள்ளார் .
செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளராகவும் இருந்து வந்தவர் வீரா. இவர், தனது அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தன. இந்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையில், செங்கல்பட்டு மாவட்ட இணை செயலாளர் வீராவை தமிழக வெற்றி கழகத்திலிருந்து நீக்கி கட்சியின் மாவட்ட தலைமை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு தவெக மாவட்ட செயலாளர் சி. வி. தினகரன் என்ற தீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்த வீரா என்ற வீராசாமி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.30 லஞ்சம் பெற்ற தவெக இணை செயலாளர்
இந்த விவகாரத்தில் சாலை பணிக்கான பில்களை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.1.30 லட்சத்தை வீரா லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த லஞ்ச பணத்தை கூகுள்பே வாயிலாக ரூ.30 ஆயிரம், இரு தவணையாக ரூ. 50 ஆயிரம் என பெறப்பட்டதாகவும், இதற்கான ஸ்கிரீன் ஷாட்டுகள் அலுவலகத்தின் பில்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தவெக கிழக்கு மாவட்ட இணை செயலாளர் வீரா விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும் படிக்க: பழனி கோயில் ரூ.100 கோடி நில முறைகேடு.. விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி.. சிக்கப் போவது யார்?




லஞ்ச விவகாரம் குறித்து தவெக நிர்வாகி விளக்கம்
அதில், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டது போல நான் எந்த திட்டப் பணிக்காகவும் லஞ்சம் வாங்கவில்லை. ஒப்பந்ததாரருக்கு நான் வழங்கி இருந்த கடனை தான் அவர் எனது கூகுள் பே அக்கவுண்டுக்கு அனுப்பி இருந்தார். இது தவறான கோணத்தில் சித்தரித்து லஞ்சம் வாங்கியதாக வதந்தி பரப்பி உள்ளனர். என்னைப் பற்றியும், முதல்வர் விஜய் பற்றியும் தவறான குற்றச்சாட்டை பலர் முன்வைத்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் ஒப்பந்ததாரரை வரவைத்து லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
முதல்வர் விஜய்- எனது பெயரை கெடுக்கும் வகையில்
தமிழக முதல்வர் விஜய், தமிழக வெற்றி கழகம் கட்சி, எனது பெயரை கெடுக்க வேண்டும் எனவும், எனது வளர்ச்சி பிடிக்காமலும் எத்தகைய செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதில், திமுகவை சேர்ந்தவர்களே சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!