பழனி கோயில் ரூ.100 கோடி நில முறைகேடு.. விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி.. சிக்கப் போவது யார்?
Palani Murugan Temple Land Case : பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 மதிப்பிலான நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆறுபடை வீடுகளில் 3- ஆம் படை வீடான முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில் நில பத்திரப்பதிவின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு உள்ள சிலர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி ஆகியோர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில், இந்த முறைகேடு வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ. 100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் ஏற்கெனவே சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம்
அத்துடன், பழனி முருகன் கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை அமரவும் தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் பின் விவரம் வருமாறு. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பூங்கா சாலையில் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 6- ஆம் தேதி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மடத்துக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவிலின் கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: என்னை இணைப்பதற்கு அவர்கள் யார்?”… பாமகவில் அடுத்த சலசலப்பு.. அவசரக் கூட்டம் கூட்டும் முன்னாள் எம்.எல்.ஏ அருள்!




பழனி சார் பதிவாளர் பணியிடை நீக்கம்
அந்த புகாரின் பேரில், போலீசார் நிலத்தை வாங்கியவர், விற்றவர், சார் பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்று வருகிறது. இதில், கோவில் நிலத்தை பத்திர பதிவு செய்த சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், பழனி சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிலை முறைகேடு வழக்கில் சிக்கப் போவது யார்
இந்த நிலையில், பத்திரப்பதிவுக்கு பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதன் காரணமாக இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் போது, இதில் முறைகேடு செய்த நபர்கள் விரைவில் சிக்குவார்கள் என்று தெரிகிறது. இதன் காரணமாக, பழனி முருகன் கோவில் நிலம் முறைகேடு வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: வீ தி லீடர்ஸ் அமைப்பின் திருச்செந்தூர் மாநாடு திடீர் ரத்து.. காரணம் என்ன.. அண்ணாமலை வெளியிட்ட முக்கிய தகவல்!