“என்னை இணைப்பதற்கு அவர்கள் யார்?”… பாமகவில் அடுத்த சலசலப்பு.. அவசரக் கூட்டம் கூட்டும் முன்னாள் எம்.எல்.ஏ அருள்!
PMK Arul: பாமக-வின் முன்னாள் எம்.எல்.ஏ அருள் நாளை சேலத்தில் தனது 2000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். அன்புமணி ராமதாஸ் தரப்புடன் பிற நிர்வாகிகள் இணையும் வேளையில், தங்களது தனித்துவமான அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாட்டை நாளைக்கே அறிவிக்கப் போவதாக அருள் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சேலம், ஜூலை 15: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தரப்பில் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து வரும் சூழலில், பாமக-வின் சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அருள், நாளை தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இக்கூட்டத்திற்குப் பிறகு தங்களது அடுத்தகட்ட அரசியல் முடிவு பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ராமதாஸ் பற்றி கூறியது குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. அதிரடி விளக்கம்!!
நாளை 2000 பிரதிநிதிகளுடன் ஆலோசனை:
“ராமதாஸுடன் 37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நாளை சேலத்தில் 2000-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கியப் பிரதிநிதிகளைக் கூட்டி விரிவான ஆலோசனையை நடத்துவள்ளோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், எங்களது அடுத்தகட்ட அரசியல் முடிவு நாளைக்கே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது” என்று அருள் கூறினார்.
அன்புமணி தரப்புக்குச் சென்றவர்கள் நிலை?
கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸைச் சந்தித்துச் சில முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அன்புமணி ராமதாஸ் அவர்களோடு போறவங்க எல்லாம் போயிட்டாங்க; நேற்றுக் கூட இரண்டு பேர் சென்று இணைந்துள்ளனர். அவர்கள் அவருடைய தலைமை பிடித்துப் போனார்களா அல்லது பிடிக்காமல் போனார்களா என்று தெரியவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒருவருடைய சிந்தனையை இன்னொருவர் மீது திணிக்கக் கூடாது” என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.
மேலும், பாமக தலைமை அலுவலகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, “நான் சில அழைப்புகளை எடுப்பதில்லை” என்று பதிலளித்தார். “அருளை மட்டும் கட்சியில் இணைக்க மாட்டோம்” என்று பாமக தரப்பில் கூறப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “என்னை இணைப்பதற்கு அவர்கள் யார்?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மாற்றுக் கட்சிகளின் அழைப்பு:
கடந்த சில மாதங்களாகப் பாமக தலைமையுடன் சற்று இடைவெளி விட்டுத் தனித்துச் செயல்பட்டு வரும் நிலையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து அழைப்பு வந்துள்ளதா என்ற கேள்விக்கு, “ஒரு வீட்டில் பெண் இருந்தால் வரன் பார்க்கப் பத்து மாப்பிள்ளைகள் வரத்தான் செய்வார்கள். அதற்காக வரும் எல்லோருக்கும் பெண்ணைக் கொடுத்துவிட முடியுமா? நாளை ஆதரவாளர்களிடம் பேசிவிட்டு நல்ல முடிவை எடுப்போம்” என்று பழமொழி பாணியில் விளக்கமளித்தார்.
இதையும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…
ஜி.கே.மணி, காந்திமணி மற்றும் பாமா நாராயணன் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாளை நடைபெறும் கூட்டம் ராமதாஸின் உண்மையான பாமக தொண்டர்களின் கூட்டமாக இருக்கும் என்றும், அதில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது என்றும் கூறினார்.