ரூ.3 கோடி நெடுஞ்சாலைத்துறை ஊழல்.. அமைச்சர் எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை!
Anti Corruption Police Questioned EV Velu: நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 3 கோடி ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எவ வேலுவிடம் ஊழல் தடுப்பு போலீசார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை தொடர்பாக எவ.வேலு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் கரூர் உள்ளிட்ட ஊர்களில் சாலைகள் அமைக்கப்படாமல் தனியார் நிறுவனத்திற்கு ரூ.3.23 கோடி நிதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், அப்போதைய நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எ.வ. வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை ஆஜராகினார். அவரிடம் போலீசார் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நிறைவடைந்து வெளியே வந்த எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன் விசாரணையின் போது உண்மையை தெரிவித்தேன் எனது மடியில் கனமில்லை எனவே வலையில் பயமில்லை.
எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் தொடர் விசாரணை
என் மனதுக்கு பட்ட உண்மைகளை தெரிவித்துள்ளேன் மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு ஆஜராவேன் என்று தெரிவித்துள்ளேன் காவல்துறையினர் மீது வருத்தம் என்பது இல்லை அவர்கள் முறைப்படி என்னிடம் விசாரணை மேற்கொண்டனர் நானும் அதற்கான பதில்களை தெரிவித்துள்ளேன் காவல்துறையினர் அம்பு தான் தவிர அவர்களை எய்தவர்கள் எங்கோ இருக்கின்றனர் அதேபோல நானும் குற்றம் இல்லாதவன் என்று தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் காலை 10.45 மணிக்கு வருகை தந்தேன். என்னிடம் விசாரணை அதிகாரி 11 மணிக்கு விசாரணையை தொடங்கினார்.
மேலும் படிக்க: தேர்தல் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!




திட்டமிட்டு என்னை வழக்கில் இணைத்துள்ளனர்
பல்வேறு கேள்விக்கணைகளை என்னிடம் தொடுத்தார்கள். என்னை பொருத்தவரை என்னுடைய பதில் 100% உண்மை கலந்ததாகும். நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று என்னுடைய பதிலை தெரிவித்துள்ளேன். அரசு திட்டமிட்டு என்னை இந்த வழக்கில் இணைத்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால் இது தொடர்பாக விரிவாக என்னால் கூற முடியாது. வருகிற 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதில், நீதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
விசாரணைக்கு ஆஜராகாமல் சிங்கப்பூர் சென்ற எ.வ.வேலு
இந்த வழக்கு தொடர்பாக எவ வேலுவின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில், கணினி உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு எவ.வேலுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அவர் ஆஜராகாமல் சிங்கப்பூரில் சிகிச்சைக்காக சென்றிருந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், அவர் இன்று ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், எவ.வேலு இன்று ஆஜராகி இருந்தார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யைச் சந்தித்த சிபிஎம் சண்முகம்.. தவெக அமைச்சரவையில் இடமா? என்ன சொல்கிறார்?