ஊழல் மற்றும் முறைகேடு புகார்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்!!
Chennai Corporation Action: சென்னை மாநகராட்சியில் போலி பில்கள் மூலம் நிதி முறைகேடு, வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் மற்றும் பொதுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய புகாரில் 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேரை மாநகராட்சி ஆணையர் சமீரன் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
சென்னை, ஜூலை 16: சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்குதல், அரசுப் பணத்தை முறைகேடு செய்தல் மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுதல் போன்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில் 4 மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 பணியாளர்களைப் பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சமீரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இவர்களில் 4 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள்:
மாநகராட்சி ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆளான அதிகாரிகள் மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் விவரங்கள் பின்வருமாறு, மண்டல சுகாதார அதிகாரியான டாக்டர் தேவிகாலா ரூ.9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்கியதாகக் கூறி, போலி பில்களைச் சமர்ப்பித்து பொதுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இக்குற்றத்திற்காக இவர் கடந்த ஜூலை 9 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மூத்த பூச்சியியல் வல்லுநர் சிவ பொற்கொடி, மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்த போதிலும், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் இவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜூலை 11 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம்:
உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ், கட்டிட உரிமையாளர் ஒருவரிடம் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ரூ.2.5 லட்சம் லஞ்சம் கோரிய குற்றத்திற்காக இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாலைப் பணியாளர் பாஸ்கர், முறையான அனுமதி பெற்று வீடு கட்டிய உரிமையாளர் ஒருவரைத் தேவையின்றி மிரட்டி, அவரிடமிருந்து ₹50,000 லஞ்சம் பறித்துள்ளார். இப்புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஜூலை 10 அன்று இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பில் கிளர்க்குகள் துர்கா மற்றும் கண்ணன் ராயபுரம் மண்டலத்தில் பணிபுரியும் இவர்கள் இருவரும், மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் கோரிய புகாரின் கீழ் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!
மாநகராட்சி ஆணையரின் எச்சரிக்கை:
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் தூய்மையான, வெளிப்படையான செயல்பாடுகளை உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களையோ அல்லது ஒப்பந்ததாரர்களையோ மிரட்டி லஞ்சம் வாங்குவோர் மற்றும் அரசுப் பணத்தை முறைகேடு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி மிகக் கடுமையான துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.