சென்னை, பிப்ரவரி 18, 2026: மகா சிவராத்திரி அன்று கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பே தவிர, கூட்டணி குறித்து எந்தப் பேச்சும் நடைபெறவில்லை; கூட்டணி தொடர்பான அறிவிப்பு தகுந்த நேரத்தில் வெளியிடப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதியை ஒட்டி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் படிக்க: மகளிர் உரிமை தொகையால் இப்படியொரு விபரீதமா.. விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்!
தேமுதிகவின் நிலைபாடு என்ன?
தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதிமுக–திமுக கூட்டணிகளில் பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தேமுதிக, புதிய தமிழகம், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. இந்த முறையும் அதே கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட தரப்புகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: திமுகவின் கடைசி பட்ஜெட்டிலும் மக்களை ஏமாற்றியுள்ளது – அண்ணாமலை கடும் விமர்சனம்..
ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்டணி பேச்சுவார்த்தை?
பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் இதேபோன்ற சந்திப்புகள் நடைபெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி குறித்து தகுந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும்:
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஈஷா யோகா மையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வேல்முருகன் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரிடம் மரியாதை நிமித்தமாகவே பேசப்பட்டது; கூட்டணி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. கூட்டணி தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும். ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு வந்தால் நல்லதே. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவது நல்ல விஷயம். அவரது வருகையால் தமிழ்நாட்டிற்கு நன்மை ஏற்பட்டால் நிச்சயமாக அதை வரவேற்போம்” என தெரிவித்தார்.