Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக உடன் கூட்டணி உறுதி செய்யும் தேமுதிக? எஸ்.பி வேலுமணியை சந்தித்த பிரேமலதா.. எப்போது அறிவிப்பு?

ADMK - DMDK Alliance: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும், இதே போன்ற ஒரு மகா சிவராத்திரி விழாவில் தான் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.பி.வேலுமணியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆன்மீக நிகழ்வாக இருந்தாலும், இதில் அரசியல் பேச்சுகள் இடம்பெற்றிருக்கலாம் என்றும், அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக கூட்டணி அமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக உடன் கூட்டணி உறுதி செய்யும் தேமுதிக? எஸ்.பி வேலுமணியை சந்தித்த பிரேமலதா.. எப்போது அறிவிப்பு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Feb 2026 06:30 AM IST

பிப்ரவரி 16, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தேமுதிக 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்திக்கும் என கூறப்படுகிறது. இதற்கான ஒரு முக்கிய நிகழ்வாக, நேற்றைய தினம் நடைபெற்ற ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் நேரடியாகப் போட்டியிடுகின்றன. இதில், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை இன்னும் அறிவிக்காமல் இருக்கின்றன.

அதே சமயத்தில், அதிமுகவிலிருந்து விலகியுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் தற்போது வரை எந்தப் பக்கம் செல்வார்கள் என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக:

இந்த நிலையில், தேமுதிக – திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் என அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. திமுகவைப் பொறுத்தவரையில், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி, குறிப்பாக ஆறு சட்டமன்ற இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியானது.

மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்கும் சசிகலா?.. பிப்.24ல் வெளியாகும் அறிவிப்பு?.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!!

ஆனால், இதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவு என கூறப்படுகிறது. காரணம், சமீபத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், தேமுதிக–திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, “தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா? பெரிய கட்சியைப் பற்றி ஏதாவது பேசுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே, தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதற்கான சாத்தியம் இல்லை என்பது வலுப்பெற்றுள்ளது.

எஸ்.பி வேலுமணியை சந்தித்த பிரேமலதா:

இது ஒரு பக்கம் இருக்க, பிப்ரவரி 15, 2026 அன்று கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும், இதே போன்ற ஒரு மகா சிவராத்திரி விழாவில் தான் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.பி.வேலுமணியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆன்மீக நிகழ்வாக இருந்தாலும், இதில் அரசியல் பேச்சுகள் இடம்பெற்றிருக்கலாம் என்றும், அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக கூட்டணி அமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… மருத்துவரிடம் நூதன மோசடி – வசமாக சிக்கிய இருவர்

அதிமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக:

இரட்டை இலக்க தொகுதிகளை குறிவைத்து தேமுதிக கேட்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக அவற்றை ஒதுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், அப்போதும் இதே போன்ற ஒரு மகா சிவராத்திரி விழாவில் தேமுதிக தரப்பில் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

எனவே, இந்த முறையும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.பி.வேலுமணியை சந்தித்திருப்பது அரசியலில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. அதிமுக–தேமுதிக கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில், குறிப்பாக புதன்கிழமை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவும் 2026 சட்டமன்றத் தேர்தலில்  இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.