இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறாதது ஏன்? தமிழக அரசு அளித்த விளக்கம்!
Interim Budget New Announcement: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாதது குறித்த காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அது என்ன விளக்கம் என்பதையும், இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழக சட்டப் பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 17) காலை தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து, அதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி குறித்த விவரங்களை அறிவித்திருந்தார். இதே போல, வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வேளாண் துறை சார்ந்த வரவு. செலவு அறிக்கை தாக்கல் செய்தவுடன், அந்த துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரத்தை வெளியிட்டு பேசியிருந்தார். இதனிடையே, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு விதமான புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகும் என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தது.
இடைக்கால பட்ஜெட்டில் ஏன் புதிய அறிவிப்புகள் இல்லை
ஆனால், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அது தொடர்பான எந்த பொது திட்டம் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் வரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாததற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கை ஆகும்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லாததற்கு காரணம்
மேலும், அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் பெறும் அறிக்கையாகவும் இருக்கும். இதன் காரணமாக, இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்து வெளியிடுவது மரபு கிடையாது. இந்த நடைமுறை முன்பு இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. இதே போல, வருகிற சட்டமன்ற தேர்தலுக்காகவும் திமுக பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை தனது தேர்தல் வாக்குறுதியில் சேர்த்து வருகிறது.
பொது மக்கள் மத்தியில் ஏமாற்றம் அளிக்கும் வகையில்…
இந்த நிலையில், திமுக அரசின் ஆட்சியில் நிறைவில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், மகளிர் உள்பட அனைத்து தரப்பு வாக்காளர்களையும் கவரும் வகையில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதே போல, திமுகவை சேர்ந்த அமைச்சர்களும் இடைக்கால பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியிருந்தனர். ஆனால், இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அது போன்ற எந்த விதமான அறிவிப்புகளோ அல்லது திட்டங்களோ இல்லாமல் போனது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: இடைக்கால பட்ஜெட் 2026 – தூய்மை பணியாளர்களுக்கு 33,000 வீடுகள்… ஐடி பார்க்.. பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்புகள் எவை?



