தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவி…மார்ச் 16- இல் மாநிலங்களவை தேர்தல்!
Rajya Sabha Election: தமிழக உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்ய சபா தேர்தல் அடுத்த மாதம் மார்ச் 16- ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதில், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த என். ஆர். இளங்கோ, திருச்சி சிவா, கனிமொழி சோமு மற்றும் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த தம்பி துரை, ஜி.கே. வாசன், செல்வராஜ் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த பதவிகளை நிரப்பும் வகையில் மார்ச் 16- ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 5-ஆம் தேதி ஆகும். மார்ச் 6- ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 9- ஆம் தேதி ஆகும்.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி.. எப்போது அறிவிக்கப்படுகிறது தெரியுமா? வெளியான தகவல்!

ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிப்பு
எம்.பி. பதவிக்கு போட்டி இருந்தால்…
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டிகள் இருப்பின் மார்ச் 16- ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், அதில், வாக்குப்பதிவு நடைபெற்றால் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், இந்த தேர்தலுக்கான நடைமுறைகள் மார்ச் 20- ஆம் தேதி முடிவடைகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராஜ்ய சபா தேர்தலுக்கான அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




கூட்டணி கட்சி தலைமையிடம் கோரிக்கை
ஏனென்றால், அரசியல் கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை உள்ளிட்டவை குறித்து பேசும்போது, தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், கூட்டணியை உறுதி செய்யவும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதில், திமுக கூட்டணியில் கடந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
திமுக-அதிமுகவில் ராஜ்ய சபா பதவி யாருக்கு
தற்போது, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு வரும் நிலையில், அந்த பதவியை தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கும் முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல, தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகள் அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு வருகிறது. இதனால், மீண்டும் தம்பிதுரை, ஜிகே வாசன் ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சருடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? தகுந்த நேரத்தில் அறிவிப்பு வரும் – பிரேமலதா விஜயகாந்த் சூசகம்..