‘அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள்தானா?’ – முதல்வருக்கு திருஷ்டி என கூறி சேவலை பலியிட்ட நபர் – வானதி சீனிவாசன் கண்டனம்
திருச்சியில் தவெக நிர்வாகி ஒருவர் முதல்வர் விஜய்க்கு திருஷ்டி இருப்பதாக கூறி அவரது படத்தின் முன்பு சேவலை பலியிட்டு, அதன் ரத்தத்தை முதல்வர் விஜய்யின் படத்தின் மீது தெளித்தார். வீடியோ வைரலான நிலையில் வானதி சீனிவாசன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சென்னை, ஜூலை 23 : பல்வேறு தடைகளுக்கு பிறகு முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தை மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் படம் பார்த்த அமைச்சர்கள் கண்ணீர் விட்டு அழும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
முதல்வருக்கு திருஷ்டி என கூறி சேவலை பலியிட்ட நபர்
இந்த நிலையில் திருச்சியில் தவெக நிர்வாகி ஒருவர் முதல்வர் விஜய்க்கு திருஷ்டி இருப்பதாக கூறி அவரது படத்தின் முன்பு சேவலை பலியிட்டு, அதன் ரத்தத்தை முதல்வர் விஜய்யின் படத்தின் மீது தெளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




இதையும் படிக்க : தமிழகத்தின் மொத்த கடன்.. பட்ஜெட்டுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!
அந்த வகையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ரசிகரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இதெல்லாம் என்ன மனநிலை என்று தெரியவில்லை..? திருச்சியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட்அவுட் முன்பாக சேவலை அறுத்து இரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொளியானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தவெக அரசு பதவியேற்ற நாளிலிருந்து நடைபெறுகிற சம்பவங்களைப் பார்த்தால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையாகவே அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள்தானா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, மதுபானத்தில் அபிஷேகம் செய்வது போன்ற செயல்கள் காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் நேற்று கொண்டாட்டத்தின் உச்சமாக சேவலை அறுத்து குருதி தெறிக்க பலியிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
வானதி சீனிவாசன் கண்டனம்
இதெல்லாம் என்ன மனநிலை என்று தெரியவில்லை..?
திருச்சியில், தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட்அவுட் முன்பாக சேவலை அறுத்து இரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொளியானது கடும் அதிர்ச்சியை… pic.twitter.com/Vb1G0N91EY
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 24, 2026
இதையும் படிக்க : VPN, டார்க் வெப் பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல்.. அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சிக்கியது எப்படி?
ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டாடுவதற்கு மரம் நடுவது, ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் கொடுப்பது என எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் கடவுள்களுக்கு உகந்த சில செயல்களை, நம்பிக்கைகளை நடிகர்கள் முன் திணிப்பது நாளடைவில் மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கும் தவறான உதாரணமாகி விடும்.
இவர்களைப் போன்றவர்கள் சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை எப்போது உணரப் போகிறார்களோ? இனி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசையும், திரைத்துறை சார்ந்தவர்களையும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.