திண்டுக்கல்லில் மகளை கேலி செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை கொன்று உடல் தண்ணீர் தொட்டியில் வீச்சு.. தந்தை உள்பட மூவர் கைது!
Dindigul Young Man Murder : திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடை ஒரு இளம் பெண்ணின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சங்கிலி முருகன் ( 38 வயது). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனதாக அவரது தந்தை செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டு அவரது சடலம் மறைக்கப்பட்டு இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சங்கிலி முருகனை காரில் அழைத்து சென்று திண்டுக்கல் சாலையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரது உடலை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடிநீர் தொட்டியில் வீசியது தெரியவந்தது.
3 பேரை கைது செய்த போலீசார்
அதன் அடிப்படையில், குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை போலீசார் மீட்டு உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, அவர் வீட்டின் அருகே வசித்து வந்த பாக்கிய செல்வம், மருதுபாண்டி, முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: நடுநடுங்க வைக்கும் சம்பவம்.. 2 பைக்கில் வந்த சுத்து போட்ட 6 பேர் கும்பல்.. செங்கல்பட்டில் இளைஞரை தீர்த்துக்கட்டிய கும்பல்!




இளம் பெண்ணை கேலி செய்த இளைஞர்
இதில், பாக்கிய செல்வத்தின் மகள் அந்த வழியாக நடந்து சென்ற போதெல்லாம், சங்கிலி முருகன் கேலி செய்து, இடையூறு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதில், சங்கிலி முருகனை அந்த இளம் பெண் கண்டித்துள்ளார். இருந்தும், சங்கிலி முருகன் தொடர்ந்து, அந்த பெண்ணிடம் கேலியும், கிண்டலும் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், கோபமடைந்த அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக தனது தந்தை பாக்கிய செல்வத்திடம் தெரிவித்துள்ளார்.
இளைஞர் – பெண்ணின் தந்தை இடையே மோதல்
இதை கேட்டு, அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பாக்கிய செல்வம், சங்கிலி முருகனை அழைத்து கண்டித்துள்ளார். இதில், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அத்துடன், பாக்கிய செல்வத்தின் மகளை, சங்கிலி முருகன் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார். தான் கண்டித்தும் கேட்காததால் பாக்கிய செல்வம் கடும் ஆத்திரம் அடைந்ததாக தெரிகிறது. இதனால், சங்கிலி முருகனிடம், பாக்கிய செல்வம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்து உடல் தண்ணீர் தொட்டியில் வீச்சு
இதில், இருவரிடையே முன் விரோதம் ஏற்பட்டதால், சங்கிலி முருகனை தீர்த்து கட்டுவதற்கு, பாக்கிய செல்வம் திட்டமிட்டார். அதன்படி, மருதுபாண்டி, முருகன் ஆகியோரின் உதவியுடன் சங்கிலி முருகனை காரில் அழைத்து சென்று கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: கோவையில் அடுத்தடுத்து பரபரப்பு.. பைக்குகள் தீப்பற்றி எரிந்து சாம்பல்.. வாகன ஓட்டிகள் கடும் அச்சம்..!