கோவையில் 50 கிலோ சந்தனம், 2 டன் மலர்களால் புலியகுளம் முந்தி விநாயகருக்கு பிரம்மாண்ட ராஜ அலங்காரம்!
Puliakulam Munti Vinayagar: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல் சிலையான கோவை புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனம், 2 டன் மலர்களால் பிரம்மாண்ட ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் மிகுந்த பக்தி பரவசத்துடனும் உற்சாகத்துடனும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் உள்ள அனைத்து விநாயகர் திருக்கோவில்களிலும் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், யாகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல் விநாயகர்
கோவை நகரின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். இங்கு வீற்றிருக்கும் விநாயகர் திருவுருவச் சிலை ஆசிய கண்டத்திலேயே மிகப்பரிய ஒற்றைக்கல் சிலையாகப் போற்றப்படுகிறது. சுமார் 190 டன் எடையும், 19 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்ட திருமேனி, கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வழிபாட்டு மையமாகத் திகழ்கிறது.
50 கிலோ சந்தனம், 2 டன் மலர்களால் ராஜ அலங்காரம்
இன்றைய விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, புலியகுளம் முந்தி விநாயகருக்குச் சிறப்புச் சந்தன காப்பு சாத்தப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசேஷ அலங்காரத்திற்காகச் சுமார் 50 கிலோ தூய சந்தனமும், 2 டன் அளவிலான வண்ணமயமான நறுமண மலர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, விநாயகர்பெருமானுக்குப் பிரம்மாண்டமான மயில் தோகை மாலையும் அணிவிக்கப்பட்டிருப்பது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பம்சமாக அமைந்து பக்தர்களைச் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
