திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றம்.. சென்னையில் தெலுங்கானா பெண்ணிடம் நகை திருடிய நபருக்கு வலைவீச்சு!
Chennai Crime : திருமண தகவல் மையம் வாயிலாக பழகி தெலுங்கானாவை சேர்ந்த பெண்ணை சென்னை கோயம்பேட்டுக்கு வரவழைத்து நூதன முறையில் அவரிடம் இருந்து 7 பவுன் நகைகளை திருடி சென்ற நபரை சிஎம்பிடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சுதா ( 40 வயது). இவர், ஹைதராபாத்தில் தங்கி இருந்து பேஷன் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் வரப்பிரசாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், சுதா மறுமணத்துக்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதன்படி, அவரது செல்போன் எண்ணுக்கு ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த சிவராமன் என்பவர் போன் செய்து திருமணம் தொடர்பாக பேசியுள்ளார். அதன்படி, இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இதனால், இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், நேரில் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சென்னை கோயம்பேடுக்கு வந்திருந்த சுதாவை சிவராமன் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து இருவரும் தங்கி உள்ளனர்.
கோயிலுக்குள் நகை அணிந்து செல்லக்கூடாது
பின்னர், அங்கிருந்து வாடகை காரில் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் பகுதியில் உள்ள திருவிடந்தை நித்திய கல்யாணி பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, இந்த கோவிலுக்குள் நகைகளை அணிந்து செல்லக்கூடாது என்று சுதாவிடம் சிவராமன் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சுதா தான் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகளை கழட்டி சிவராமனிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து, இருவரும் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் இரவு தனியார் விடுதிக்கு திரும்பி உள்ளனர்.
மேலும் படிக்க: தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!




டிக்கெட் எடுத்து வருவதாக நகையுடன் வெளியே சென்றார்
விடுதி அறையில் இருவரும் குளித்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி, ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் எடுத்து வருவதாக சுதாவிடம் கூறிவிட்டு சிவராமன் வெளியே சென்றுள்ளார். ஆனால், வெகு நேரம் ஆகியும் சிவராமன் விடுதி அறைக்கு விரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த சுதா, சிவராமனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னரே, தன்னை நம்ப வைத்து தன்னிடம் இருந்து நகைகளை சிவராமன் திருடி சென்றதை சுதா உணர்ந்தார்.
சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார்
பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை புறநகர் பேருந்து நிலையம் காவல் நிலையத்தில் சுதா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பேருந்து நிலையம் மற்றும் தனியார் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும், தலைமறைவான சிவராமனை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: பெற்ற மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநரான தந்தை அதிரடி கைது.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!