சட்டபேரவையில் ஒலித்த ‘இயக்குநர் அட்லி’ பெயர்.. முன்னாள் திமுக VS தற்போதைய தவெக அமைச்சர்கள் காரசார மோதல்!!
"தற்போதைய ஆட்சிக்கும் இயக்குனர் அட்லிக்கும் என்ன தொடர்பு? எனவே, பேரவையில் இதுபோன்ற சம்பந்தமில்லாத வாதங்களை முன்வைக்காமல், மக்களுக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் பேசுங்கள்" என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். சட்டமன்றத்தில் தவெக குறித்து திமுகவினர் பொதுக்கூட்ட மேடைகளில் விமர்சித்ததற்கு தங்களால் தகுந்த பதிலடி கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சென்னை, ஜுன் 19: தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேரவையில் நேரெதிராக அமர்ந்திருக்க, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே சுவாரசியமான வாத பிரதிவாதங்கள் அரங்கேறின. விவாதத்தில் திமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தமிழக வெற்றிக் கழக அரசின் திட்டங்களை சினிமா இயக்குனர் அட்லியின் பாணியோடு ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக சிவசங்கரின் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக காரசாரமாக பதிலடி கொடுத்தார்.
இதையும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்
அட்லி பட பானியில் தவெக அரசு:
அவர் பேசுகையில், “திரைப்பட இயக்குனர் அட்லி ஒரு நல்ல இயக்குனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படங்களின் காட்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து இணைத்து ஒரு புதிய படம் போல கொடுத்துவிடுவார். அதேபோலத்தான் தவெக அரசும், திமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் அங்கும் இங்குமாக எடுத்துக்கொண்டு, தங்களின் புதிய திட்டங்கள் என்பது போல ஆளுநர் உரையில் இடம்பெறச் செய்து ஆட்சி நடத்தி வருகிறது” என்று சாடினார்.
வாக்கு வித்தியாசம் குறித்த விவாதம்:
தொடர்ந்து பேசிய சிவசங்கர், “திமுகவை விட தவெக ஒன்றும் கூடுதலான வாக்குகளைப் பெற்றுவிடவில்லை. திமுக கூட்டணி கட்சிகளோடு இணைந்து பெற்ற ஒட்டுமொத்த வாக்குகளை, ஏதோ திமுகவின் தனிப்பட்ட வாக்குகள் என்பது போலவும், தவெக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியைத் தவறவிட்டது என்பது போலவும் ஒரு தோற்றத்தை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள்” என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தவெக அரசுக்கு வாக்களித்த மக்களும், அவர்களது கூட்டணியில் உள்ள கட்சிகளும் தற்போதே போராட்டங்களை தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசு ஆட்சி நடத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி:
சிவசங்கரின் இந்த விமர்சனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாகப் பேரவையில் பதிலடி கொடுத்தார். அமைச்சர் பேசுகையில், “எங்களது முதலமைச்சர் ஜோசப் விஜய் திரைப்படத்துறையிலிருந்து மக்கள் பணி செய்வதற்காக அரசியலுக்கு வந்தவர் என்பதால் அவருக்கு சினிமா பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால், ஒரு முழுநேர அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் சிவசங்கர், இயக்குனர் அட்லி பற்றி இந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருப்பது எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது” என்றார்.
மேலும், “தற்போதைய ஆட்சிக்கும் இயக்குனர் அட்லிக்கும் என்ன தொடர்பு? எனவே, பேரவையில் இதுபோன்ற சம்பந்தமில்லாத வாதங்களை முன்வைக்காமல், மக்களுக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் பேசுங்கள்” என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். சட்டமன்றத்தில் தவெக குறித்து திமுகவினர் பொதுக்கூட்ட மேடைகளில் விமர்சித்ததற்கு தங்களால் தகுந்த பதிலடி கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!
அமைதி காத்த தலைவர்கள்:
சட்டமன்றத்தில் இயக்குனர் அட்லி தொடர்பான இந்த சுவாரசியமான விவாதம் மற்றும் காரசாரமான வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எந்தவித குறுக்கீடும் செய்யாமல் அமைதி காத்தனர். அதேநேரம், அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது மட்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் சில குறுக்கீடுகளைச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.