தவெக ஆட்சி அமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்.. பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன் சவால்!
Bjp Leader Nainar Nagendran : தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சி அமைப்பதற்காக எந்தெந்த கட்சிகளுடன் தொலை பேசியில் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான பட்டியலை வெளியிடவா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்றார். இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் தேவை கவர்னருக்கு தெரியாது. அரசுக்கு மட்டுமே தெரியும். எங்களை பொறுத்தவரை கவர்னர் என்பவர் வெறும் மேனேஜர் தான். ஒரு மாநிலத்தின் கவர்னராக பிரதமர் நரேந்திர மோடியின் உறவினரோ அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறவினரோ கூட நியமிக்கப்படலாம். எனவே, தமிழகத்துக்கு ஆளுநர் தேவை இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனங்களை தமிழக அரசே மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு அடிப்படை தெரியாத அமைச்சர் நிர்மல் குமார்
இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அரசியல் அமைப்பின் அடிப்படை கூட தெரியாமல் சட்டத்துறை அமைச்சர் ஆகியுள்ள நிர்மல் குமார் அவர்களே பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் தங்களது உறவினர்களை கூட மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கலாம் என்ற தங்களின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது ஆகும். தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு ஆளுநர் தேவை இல்லை என்று வெட்டி வீராப்பு காட்டும் நீங்கள் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சி அமைக்க முடியாமல் எத்தனை முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றீர்கள்.
மேலும் படிக்க: கரூர் மரணங்களுக்கு என் மீது பழி போட்டனர் – முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு




ஆட்சி அமைப்பதற்காக பேசியவர்களின் பட்டியல்
ஆட்சி அமைப்பதற்காக தொலைபேசி வாயிலாக எந்தெந்த கட்சிகளை தொடர்பு கொண்டீர்கள் என்ற பட்டியலை நான் வெளியிடட்டுமா. எனவே, இனியும் இது போன்ற அரசியல் ஸ்டண்டுகளை செய்யாதீர்கள் அமைச்சரே. அரசியலிலும், கல்வியிலும் மற்றும் மக்கள் சேவையிலும் அனுபவம் வாய்ந்தவர்களை ஆளுநராக நியமித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது இப்படி ஒரு கீழ்த்தரமான விமர்சனத்தை த்தை வைத்ததற்கு நீங்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவெகவுக்கும், திமுகவுக்கும் வித்தியாசம் இல்லை
அரசுப் பதவியில் இருக்கும் நீங்கள் இனியும் ஆதாரமற்ற அரைகுறை விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் சட்டம்- ஒழுங்கு, பெருகிவரும் பாலியல் சம்பவங்கள், வன்முறைகள், தவெக கட்சியினரின் அட்ரா சிட்டிகள் உள்ளிட்டவற்றை மறைத்து, மக்களை மடை மாற்றும் உங்களுக்கும், திமுகவுக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ’ஒரு ஆக்ஷன் செஞ்சுக்கிறேன்’ – சட்டப்பேரவையில் ஆக்ஷன் செய்து உரையை முடித்த முதல்வர் விஜய்!