பாஜக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்… ஜான்பாண்டியன் எடுத்த திடீர் முடிவு!
Tamilaga Makkal Munnetra Kazhagam: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி விலகியதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு குறித்து பொதுக்குழுவில் அறிவிப்பதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி அங்கம் வகித்திருந்தது. தற்போது, இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தமமுக கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளை முன்னிறுத்தியும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தற்காத் கொள்ளும் பொருட்டு முழுமையாக வெளியேறுகிறோம். வரும் காலங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் எங்களது கட்சி கூட்டணியில் இருக்காது என்பதை தெளிவுபடுத்துகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் இந்த முடிவை செய்தியாளர்கள் சந்திப்பு வழியாக டெல்லி மற்றும் தமிழக பாஜக தலைமைக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜான்பாண்டியன் குறிப்பிட்டார்.
தமமுகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு
மேலும், எங்களது அடுத்த கட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்து கட்சியின் மாநில மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட உள்ளது. அந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்து முறைப்படி அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். தேர்தல் நேரங்களில் யாருடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு அதன் பின்னரே எங்களது இறுதி முடிவை முறைப்படி அறிவிப்போம் என்று ஜான் பாண்டியன் திட்டபட்டமாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: பவர் ஷேரிங் கொடுத்த தவெக ஆட்சியில் பவர் இல்லை.. உதயநிதி பேச்சால் சிரிப்பலை!




அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த தமமுக
தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகுதியில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா போட்டியிட்டார். ஆனால், அவர் தோல்வியை தழுவினார். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பல்வேறு அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.
பாஜக கூட்டணியில் இருந்து இரு கட்சிகள் விலகல்
இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஏற்கனவே ஜி. கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறிய நிலையில், தற்போது, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. இதனிடையே, தமிழக பாஜகவில் இருந்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நீங்கள் வாங்கிய மின்மாற்றிகள் லட்சணம் தெரியும்.. அமைதியாக இருக்கலாம் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் vs செந்தில் பாலாஜி..