வந்தே பாரத் ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்.. இனி மிஸ்ஸே ஆகாது… என்ன அது!
Vande Bharat Current Booking : வந்தே பாரத் ரயில்களில் நடப்பு முன்பதிவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வந்தே பாரத் ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாகவே காலி இருக்கைகளை முன்பதிவு செய்து பயணம் செய்ய முடியும்.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த ரயில்கள் மூலமாக ஆண்டுக்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் வருவாயும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024- 2025- ஆம் ஆண்டில் வந்தே பாரத் ரயில்களில் 54 லட்சத்து 12 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக ரூ.540 கோடியே 65 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. 2025- 2026- ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் 24 பந்தே பாரத் ரயில்களில் சுமார் 77 லட்சத்து 38 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலமாக ரூ.803 கோடியே 86 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் நடப்பு முன்பதிவு திட்டம் ( Current Booking) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
15 நிமிடங்களுக்கு முன்னதாக இருக்கை முன்பதிவு
அதாவது, வந்தே பாரத் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை காலியாக உள்ள இருக்கைகளை முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும். இந்த திட்டமானது ரயில் புறப்படும் ரயில் நிலையத்தில் மட்டும் இன்றி, ரயில் செல்லும் வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ரயில் புறப்படுவதற்கு கடைசி நேரத்திலும் பயணிகள் வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியும்.
மேலும் படிக்க: தெரு நாய்களால் அதிகரிக்கும் அச்சம்.. நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு




ரூ.162 கோடியே 96 லட்சம் வருவாய்
தற்போது மங்களூரு- திருவனந்தபுரம், சென்னை எழும்பூர்- நாகர்கோவில், காசர்கோடு- திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களில் பெரும்பாலும் 100 சதவீதம் இருக்கைகள் நிரம்பி விடுகிறது. அந்த அளவுக்கு பயணிகள் மத்தியில் இந்த குறிப்பிட்ட ரயில்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2026- 2027- ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் ( ஏப்ரல் மற்றும் மே) மற்றும் இந்த ரயில்களில் 15 லட்சத்து 21 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக, ரூ.162 கோடியே 96 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு
இதன் மூலம் பொது மக்களுக்கும் வந்தே பாரத் ரயில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அத்துடன் ரயில்வே துறைக்கும் பெருமளவு வருவாய் கிடைத்து வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் மற்ற ரயில்களில் இருப்பது போல, வந்தே பாரத் ரயில்களிலும் நடப்பு முன்பதிவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 14.6 கி.மீ. நீளமுள்ள வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதை.. ஜூலை மாதம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி..