தெரு நாய்களால் அதிகரிக்கும் அச்சம்.. நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
Chennai High Court on Street Dogs: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தள்ளிவைத்தனர்.
ஜூன் 22, 2026: கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளதாகவும், அதனால் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஊடகங்களில் வெளியான தகவல்களை சுட்டிக்காட்டியது.
பொது இடங்களில் தெரு நாய்கள் நடமாட்டம்:
மேலும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடக்கூடாது என்றும், அவற்றை முறையாக பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: பவர் ஷேரிங் கொடுத்த தவெக ஆட்சியில் பவர் இல்லை.. உதயநிதி பேச்சால் சிரிப்பலை!
அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எண்ணிக்கையில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை:
உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, அவற்றின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு:
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தள்ளிவைத்தனர்.
குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பொதுமக்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.