மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
NTK Announces Candidates : இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் மற்றும் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 13 : தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் தவெக சார்பில் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் வேட்பாளர்களை வருகிற செப்டம்பர் 15, 2026 அன்று அறிவிக்கவுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியும் தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் மற்றும் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளயிட்டுள்ள பதிவில், வருகின்ற அக்டோபர் 06, 2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடிசட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.




இதையும் படிக்க : “முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன், ஆனால்.. வேறுவிதமாக வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்”.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!!
சீமானின் எக்ஸ் பதிவு
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்புவருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர்… pic.twitter.com/WP7fa0ymW2
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 13, 2026
அதன் படி மதுராந்தகம் தொகுதியில் ஜானகிராமன் என்பவரும், தாராபுரத்தில் கார்த்திகா என்பவரும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடியில் கார்த்திக் குமாரியும் போட்டியிடவுள்ளனர். சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!
முன்னதாக தவெக சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர். இதனால் இந்த சட்டமன்றத்தில் 5 முனை போட்டி நிலவும் என்பதால் தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது உறுதியாகிறது.
இதற்கிடையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனியாக போட்டியிடும் என வீரபாண்டியன் அறிவித்துள்ளார். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடவுள்ளதாகவும் வேட்பாளர் வருகிற செப்டம்பர் 15, 2026 அன்று அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.