இடைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டி – வீரபாண்டியன் அறிவிப்பு
Left Parties to Contest Separately : இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனியாக போட்டியிடும் என வீரபாண்டியன் அறிவித்துள்ளார். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்தார்.
சென்னை, செப்டம்பர் 13 : இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனியாக போட்டியிடும் என வீரபாண்டியன் அறிவித்துள்ளார். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்தார். முன்னதாக தவெக ஆட்சியமைக்க இடது கட்சிகள் ஆதரவு அளித்திருந்த நிலையில் தற்போது தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இடைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டி
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, இந்திய முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை ஆதரவு அளித்தனர். இதில் காங்கிரஸ் கட்சி நேரடியாக தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், மற்ற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தன.
இதையும் படிக்க : “ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!




இந்த நிலையில் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் செப்டம்பர் 9, 2026 அன்று பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள், மதிமுக ஆகிய கட்சிகள் கலந்துகொண்ட நிலையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்தன. இந்த நிலையில் கூட்டணிக்கு மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயரிடப்பட்டது.
இதற்கிடையில் வருகிற அக்டோபர் 6, 2026 தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் முடிவை அறிவிக்காமல் இருந்தன. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சிகளின் செயற்குழு கூட்டம் செப்டம்பர் 13, 2026 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து செப்டம்பர் 13, 2026 இன்று செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் எனவும் தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (போட்டியிடும் என்றும் தெரிவித்தார். மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 15, 2026 அன்று அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : “கொளத்தூர் முன்னாள் MLA வளர்த்த லட்சணம் இதுதான்!”.. சேகர் பாபு பேச்சை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் விளாசல்!!
இதுதொடர்பாக பேசிய அவர், இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல. திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை. கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். மதச்சார்பின்மைக்கு எதிராக தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.