“முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன், ஆனால்.. வேறுவிதமாக வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்”.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!!
EPS Slams CM Vijays london Visit: முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், அதிகரித்து வரும் விலைவாசி, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாதது என திமுக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், கொள்முதல் செய்யப்படாமல் மழையில் வீணாகும் நெல்மணிகளைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி, செப்.13: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் புறக்கணிக்கும் போக்கு ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களின் நலன் காக்கவும், குடிநீர் சுத்திகரிப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதை நினைவுகூர்ந்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, தற்போதைய தவெக ஆட்சியின் சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அவர், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய இந்த அரசு, விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், தொழில்துறை முதலீடுகள், விவசாயிகள் படும் இன்னல்கள் மற்றும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரல் நசுக்கப்படுவது குறித்து விரிவாகப் பேசி தனது கண்டனப் பதிவு செய்தார்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்:
இன்றைய சூழ்நிலையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்து, பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். ஆனால், இந்த விலைவாசி உயர்வைப் பற்றிப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தபோதிலும், அதைக் கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் சாடினார்.
வெளிநாட்டிற்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து, அதன்மூலம் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்த்தால், அங்கு வெளியாகும் புகைப்படங்கள் வேறுவிதமாக வந்து கொண்டிருக்கின்றன என்று முதலமைச்சரின் பயணத்தைக் குறிப்பிட்டு மறைமுகமாகவும் காரசாரமாகவும் விமர்சித்தார்.
இதையும் படிக்க: “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!
மின்வெட்டுப் பிரச்னை அதிமுக ஆட்சிக்கால ஒப்பீடு:
மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, 2011-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பேற்றபோது இருந்த கடுமையான மின்வெட்டை மூன்றே ஆண்டுகளில் சரிசெய்து, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியது அதிமுக அரசு என்பதை நினைவுகூர்ந்தார்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதையும், ஆனால் தற்போதைய ஆட்சியில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் மற்றும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி வாக்குறுதி துரோகம்:
தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், 5 ஏக்கருக்குக் குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்குப் பாதி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: “ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்டத் திட்டங்களில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, ஒரு லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு வெறும் 75 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி என்றும், மற்றவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, இதனால் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றார்.