பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் – செய்தியாளர்களின் பதிலளித்த அமைச்சர்
அமைச்சர் சரத்குமாரிடம் ஆலந்தூர் பகுதியில் சமீபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான பாலியல் தொல்லை சம்பவத்தைக் குறிப்பிட்டு, அது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எந்த நிர்வாகியாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் என்றார்.
சென்னை, ஜூன் 12 : சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணா நிர்வாகப் பயிற்சி மையத்தில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஜூன் 12, 2026 இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகளின் தரம், வருங்காலத்தில் அளிக்கப்பட வேண்டிய மேம்படுத்தப்பட்ட பயிற்சி முறைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசித்தார்.
செய்தியாளர்களின் பதிலளிக்க திணறிய அமைச்சர்
குறிப்பாக, தற்போதைய நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப, அரசு ஊழியர்களைத் தயார்படுத்துவது எப்படி என்பது குறித்தும், அதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை எளிய முறையில் கொண்டு சேர்ப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சரத்குமார், தனது துறையின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்துப் பேசினார்.
இதையும் படிக்க : ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!




அமைச்சரின் விளக்கம் முடிந்ததும், அங்கிருந்த செய்தியாளர்கள் ஆலந்தூர் பகுதியில் சமீபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான பாலியல் தொல்லை சம்பவத்தைக் குறிப்பிட்டு, அது குறித்த கேள்விகளை எழுப்பினர். தவெக (TVK) நிர்வாகி ஒருவர் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் அந்தச் சம்பவம் குறித்து கேள்வி கேட்டதும், அமைச்சர் முகம் சுழித்தார். எவ்விதப் பதிலும் அளிக்காமல், சட்டென்று அங்கிருந்து புறப்பட முயன்றார்.
அமைச்சரின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், அவரை விடாமல் கேள்விகளை அடுக்கினர். அமைச்சரின் வாகனத்தை நோக்கிச் சென்ற செய்தியாளர்கள், “முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்க மறுக்கிறார் என்றால், அமைச்சர்களாகிய நீங்களும் அதே பாணியைப் பின்பற்றுகிறீர்களா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்களின் விடாத கேள்விகளால் வேறு வழியின்றி மௌனம் கலைத்த அமைச்சர் சரத்குமார், “இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கட்டாயம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும். எந்த நிர்வாகியாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும். தலைவரின் ஆட்சியில் தவறு செய்யும் எவரும் தப்பிக்க முடியாது; அவர்கள் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்” என்று உறுதிபடக் கூறினார்.
இதையும் படிக்க : கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!
மக்கள் பிரதிநிதிகள் இத்தகைய உணர்ச்சிகரமான மற்றும் சமூக பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் பதில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.