மக்கள் நீதி மய்யத்தின் கூடுதல் தொகுதிகள் கேட்கும் முடிவு?திமுவின் ஒற்றை இலக்க நிலைப்பாடு..கமலஹாசன் திட்டம் சாத்தியமாகுமா!
Makkal Needhi Maiam: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி தலைமையிடன் கூடுதல் தொகுதிகள் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, திமுக ஒரு திட்டமிட்டுள்ளதாகவும், அதில், கமலஹாசனின் நிலைப்பாடு எப்படி எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி நெருங்கி வருகிறது. இதனால், தமிழகத்தின் பிரதான கட்சிகளாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம், அதிமுக ஆகிய கட்சிகளில் உள்ள தோழமைக் கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்து வருகின்றன. அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியிடம் எத்தனை தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பது தொடர்பாகவும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இதில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனவும், அதற்கான தொகுதிகளை திமுக தலைமையிடம் கேட்டு பெற வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கி வருகின்றன. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வரிசையில் தற்போது மக்கள் நீதி மயமும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மநீம செயற்குழு கூட்டத்தில் முடிவு
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை (ஜனவரி 24) செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூடுதல் தொகுதிகளில், அதாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனவும், இதற்கான தொகுதிகளை திமுக தலைமையிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ்?.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?..




கட்சியினரின் கருத்துக்களை கேட்கும் கமலஹாசன்
இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியினரின் கருத்துக்களை மநீம தலைவர் கமலஹாசன் கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் குழு கூட்டத்தில் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தியதாகவும், அதற்கு கமலஹாசன் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.
திமுகவின் திட்டம்-கமலஹாசன் நிலைப்பாடு
இதனிடையே, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் நீதி மய்யத்துக்கு 2 முதல் 5 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த தொகுதிகளை கமலஹாசன் ஏற்பாரா? அல்லது கூடுதல் தொகுதிகள் கேட்டு கோரிக்கை வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க: ‘அதிமுக உடனான கூட்டணியால் அதிருப்தி’.. திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயாலளர்..