மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்..
இந்த தகவலை உண்மையென நம்பிய சுமார் 20 பேர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்தனர். அவர்களில் காவிரி, இராமாயி, சித்ரா ஆகிய மூன்று பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். பின்னர், தாங்கள் மொட்டை அடித்த புகைப்படங்களை அந்த மர்ம நபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளனர்.
ஜூலை 28, 2026: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மொட்டை அடித்துக் கொண்டால் அரசு சார்பில் ரூ. 45 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற போலி தகவலை நம்பி மூன்று பெண்கள் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்துள்ளார். அவர், தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
அப்போது, “கொரோனாவைப் போன்ற புதிய வகை நோய் ஒன்று பரவி வருகிறது. அந்த நோய் தலைமுடி வழியாகப் பரவுவதால், வெளிநாடுகளில் மக்கள் மொட்டை அடித்து பாதுகாப்பாக இருக்கின்றனர். அதேபோல் மொட்டை அடித்தால் இந்த நோயிலிருந்து தப்பிக்கலாம்” என்று கூறியுள்ளார்.
மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் வழங்கப்படும்:
மேலும், “இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பங்கேற்பவர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு ₹15 ஆயிரம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ₹45 ஆயிரம் மற்றும் ஒரு லேப்டாப், ஆண்களுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்படும். இந்த கிராமத்திற்கு தற்போது 18 டோக்கன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து, மொட்டை அடிக்கத் தயாராக இருக்கும் நபர்களை அழைத்து வாருங்கள்” என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்…
இந்த தகவலை உண்மையென நம்பிய சுமார் 20 பேர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்தனர். அவர்களில் காவிரி, இராமாயி, சித்ரா ஆகிய மூன்று பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். பின்னர், தாங்கள் மொட்டை அடித்த புகைப்படங்களை அந்த மர்ம நபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளனர்.
ஏமாற்றமடைந்ததை உணர்ந்த பெண்கள்:
அதன்பிறகு, அவரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் எண் ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மூன்று பெண்கள் மொட்டை அடித்த நிலையில், மொட்டை அடிக்கத் தயாராக இருந்த மற்ற 20 பேர் சந்தேகமடைந்து, அதிலிருந்து விலகிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “புதிய வகை நோயிலிருந்து தப்பிக்க மொட்டை அடித்துக் கொண்டவர்களுக்கு அரசு பணம் வழங்கும் என்று கூறி, ஏற்கனவே மொட்டை அடித்த சிலரின் புகைப்படங்களையும் அனுப்பியிருந்தனர். அதை நம்பித்தான் பலரும் ஏமாந்தனர்” என்றார்.
மேலும் படிக்க: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா – அண்ணாமலை கேள்வி..
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களை ஏமாற்றிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரசு சார்பில் இதுபோன்ற எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்கள் அல்லது தொலைபேசி மூலம் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.