காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா – அண்ணாமலை கேள்வி..
தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
ஜூலை 28, 2026: மேகதாது அணை விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசிற்கு அண்ணாமலை கேள்வி:
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று… pic.twitter.com/kEoqo6VXac
— K.Annamalai (@annamalai_k) July 28, 2026
இந்தச் சூழலில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா?” என்ற கேள்வியை எழுப்பி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கடந்த 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு, காவிரி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்று மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்…
அனுமதியின்றி அணை கட்ட முடியாது:
கடந்த 05.08.2021 அன்று, அப்போதைய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடக மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டுச் சட்டத்தின்படி, காவிரியின் கீழ்மட்டத்தில் அமைந்துள்ள மாநிலங்களின், குறிப்பாக தமிழ்நாட்டின், ஒப்புதல் இன்றி நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட எந்தக் கட்டமைப்பையும் அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா:
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
Also Read: மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது…. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.