ஊருக்குள் புகுந்து தென்னை மரங்களை வேருடன் சாய்த்த யானைகள்.. தென்காசியில் விவசாயிகள், பொதுமக்கள் வேதனை!
Elephants Destroyed Coconut Trees | தென்காசியில் மலை அடிவாரத்தில் மேக்கரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், நேற்று முன் தினம் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்த யானைகள் தென்னை மரங்களை வேருடன் சாய்த்து அட்டகாசம் செய்துள்ளன.
செங்கோட்டை, ஜூன் 08 : தென்காசி (Tenkasi) மாவட்டம், செங்கோட்டை பகுதியில் ஊருக்குள் புகுந்த யானகள் சில அந்த பகுதியில் இருந்த தென்னை மரங்களை வேருடன் சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன. மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் மலை அடிவாரத்திற்கு வருவது வழக்கமாக உள்ள நிலையில், மலை அடிவாரத்துக்கு வந்த யானைகள் சில இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென்னை மரங்களை வேருடன் சாய்த்த யானைகள்
செங்கோட்டை அருகே தமிழகம் மற்றும் கேரளம் எல்லை பகுதியில் மேக்கரை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான நிலங்கள், தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள மலைப்பகுதியில் இருந்து யானை, பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் இந்த கிராமத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. குறிப்பாக மலையடிவாரத்திற்கு வந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்துவதை அந்த வன விலங்குகள் வழக்கமாக கொண்டுள்ளன.
இதையும் படிங்க : மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு – தவெக அரசின் பித்தலாட்டம் – திமுக கடும் விமர்சனம்
அந்த வகையில், மேக்கரை பகுதியில் உள்ள அப்பாச்சி என்ற நபருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்துள்ளன. அவை, அங்கிருந்த தென்னை மரங்களை வேருடன் சாய்த்து கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன. இரவு நேரம் என்பதால் யானைகள் செய்த இந்த அட்டகாசம் தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், மறுநாள் காலை அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது தென்னை மரங்கள் வேருடன் சரிந்து கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : கொளத்தூரை இழந்தது போல… கோட்டையை இழந்தது போல… மு.க.ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் பதில்
சோலார் மின்வேளி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இவ்வாறு மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று அட்டாகாசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன. தற்போது தென்காசியில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், யானைகளின் நடமாட்டம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க மின்சார வேலி அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



