சட்டப்போராட்டத்திற்கு தயார்.. நீதிமன்றத்தில் பதிலடி கொடுப்பேன்.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சூளுரை!
Former Minister V Senthilbalaji : தமிழக வெற்றிக் கழக அரசு பதிவு செய்த அனைத்த வழக்குகளையும் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தெரிவித்தார். அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கம்போல இன்று சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் எனது பெயர் இல்லாத நிலையில், எனது பெயர் வேண்டும் என்று சேர்க்கப்பட்டு அதற்காக முன் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கையெழுத்திட்டு வருகிறேன். இதற்காக நான் தங்கி இருந்த ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதுடன், புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்காக மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளேன். இதன் காரணமாக, காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி விசாரணை அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.
டாஸ்மாக் முறைகேட்டில் இருவர் கைது
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி வேண்டும் என்று மேற்கண்ட மனு தாக்கல் செய்திருந்தோம். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் எனக்கு முன் ஜாமீன் வழங்கிய நிலையில், காவல் நிலையத்தில் இரு வேளையில் கையெழுத்து இட்டு வருகிறேன். டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கரூரை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில். ஒருவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. மற்றொருவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
மேலும் படிக்க: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்.. டிஜிட்டல் முறையில் வீடு வீடாகக் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!




தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான ஆட்சி நடைபெறவில்லை
ஆனால், அந்த நபரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக தங்கள் தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். தமிழகத்தில் ஆக்கபூர்வமான ஆட்சி நடக்கிறது என்றால் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்
ஆனால். தமிழக வெற்றிக் கழக அரசு வழக்கு பதிவு செய்வதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வாக நீதிமன்றம் உள்ளது. எங்கள் மீது எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவற்றையெல்லாம் நீதிமன்றங்களில் எதிர்கொண்டு எங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபித்து காட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. கிருஷ்ணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.. தலைவர்கள் தீவிர ஆலோசனை!!