தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்.. டிஜிட்டல் முறையில் வீடு வீடாகக் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!
Madurai Population Census Begins: தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீடு மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரையில் 33 கேள்விகளுடன் நடைபெறும் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு குறித்து மாநகராட்சி ஆணையர் நேரடி பேட்டி அளித்துள்ளார்.
மதுரை, ஆகஸ்ட் 01: நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீடு மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சியில் ஆசிரியர் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் இந்த கணக்கெடுப்புப் பணிகளை மதுரை மாநகராட்சி ஆணையர் கௌரவ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
முதன்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு:
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த முறை காகிதப் படிவங்களுக்குப் பதிலாக, டிஜிட்டல் முறையில் நேரடியாக மொபைல் ஆப்/ஆன்லைன் மூலமாகத் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. வீட்டின் வசதி, கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளதா, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், தொலைக்காட்சி, செல்போன், கணினி/லேப்டாப் போன்ற சாதனங்கள் பயன்பாடு குறித்த 33 அடிப்படை கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்களின் சாதி/சமூகப் பிரிவு குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டுப் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
மதுரை மாநகராட்சியின் ஏற்பாடுகள்:
மதுரை மாநகராட்சி ஆணையர் அளித்த தகவலின்படி, கணக்கெடுப்புப் பணிகளுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 30 நாட்களுக்கு இந்த முதற்கட்டக் கணக்கெடுப்பு நடைபெறும். மதுரை மாநகராட்சியில் 2,031 கணக்கெடுப்பாளர்கள் (ஆசிரியர்கள் உட்பட) நியமிக்கப்பட்டுள்ளனர். 6 கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம் மொத்தம் 341 மேற்பார்வையாளர்கள் பணிகளைக் கண்காணிக்கின்றனர். 200 முதல் 250 வீடுகள் கொண்ட ஒரு ‘ஹவுஸ் லிஸ்டிங் பிளாக்’ உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பிளாக்கிற்கும் ஒரு கணக்கெடுப்பாளர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம்:
கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளிப்போன மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டங்களை முறையாகச் திட்டமிடவும், தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்தத் தகவல்கள் மிக முக்கியத் தரவாகப் பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
35,000 பேருக்கு மேல் சுயப் பதிவு:
பொதுமக்கள் கணக்கெடுப்பாளர்கள் வரும் முன்பாகவே ஆன்லைன் மூலமாகத் தங்களது விவரங்களை தாங்களே பதிவிடும் ‘Self Enumeration’ முறையை மதுரை மாநகராட்சியில் 35,000-க்கும் மேற்பட்டோர் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர். தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகப் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
வெளியூர் சென்றோர் கணக்கெடுப்பு எப்போது?
வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூர்களுக்கோ வேலை நிமித்தமாகச் சென்றவர்களின் விவரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆணையர், “தற்போது நடைபெறுவது முழுக்க முழுக்க ‘வீடுகள் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு’ மட்டுமே. தனிநபர்கள் மற்றும் மனிதர்களுக்கான முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறும். அப்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தகவல்களும் முறையாகப் பதிவு செய்யப்படும்” எனக் குறிப்பிட்டார்.