முதல்வர் விஜய் ஆட்சிக்கு 100-க்கு 100 மார்க்.. அதிரடியாக பாராட்டிய முன்னாள் டிஜிபி ரவி!
Former DGP Ravi Give 100 Marks Vijay: தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற 10 நாள்கள் ஆட்சிக்கு 100 மதிப்பெண்கள் வழங்குவேன் என்று முன்னாள் டிஜிபி- ஆன ரவி தெரிவித்தார். தவெக 120 இடங்களில் வெற்றி பெரும் எனவும் கணித்திருந்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சில கருத்துக்கணிப்புகளில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், தமிழகத்தில் ஓய்வு பெற்ற டிஜிபியான ரவி தனது காவல்துறை வட்டாரத்தில் கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தார். அதில் சுமார் 120 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த நிலையில், முன்னாள் டிஜிபி ரவி தான் எடுத்த கருத்துக்கணிப்பு பற்றியும், முதல்வர் விஜயின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பது பற்றியும் பேட்டியளித்துள்ளார்.
சிறுவயது முதல் அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறேன்
அதில், நான் சிறுவயதில் இருந்தேன் அரசியலை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். கடந்த 1977- ஆம் ஆண்டு அவசர நிலை முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் எனது தந்தை போட்டியிட்டார். காங்கிரஸ், ஜனதா தளம், திமுக, புதிதாக தொடங்கப்பட்ட அதிமுக என 4 முனைப் போட்டி நிலவியது. அப்போது, எனது தந்தையுடன் சேர்த்து அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். மேலும், எனது பள்ளியின் நிர்வாகியான நாச்சிமுத்து என்பவர் 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர் ஆவார். இதன் மூலம் தொடக்கத்தில் இருந்து அரசியல் சூழலில் நான் வளர்ந்துள்ளேன்.
மேலும் படிக்க: ‘வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியும், இன்ஸ்டாகிராம் அட்வைஸும்’.. கனிமொழி எம்.பி கொடுத்த பகுத்தறிவு டோஸ்!




வாக்களர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்
கடந்த 31 ஆண்டுகள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதில் கிடைத்த கள அனுபவம் மற்றும் அரசியல் நிலவரங்கள் ஆகியவை துல்லியமாக கணிக்க எனக்கு பெரிதாக உதவியது. இந்த தரவுகளை வெறும் புள்ளி விவரமாக மட்டும் பார்க்காமல் களத்தில் உறுதிப்படுத்துவதற்காக முன்னாள் காவல்துறை நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பயன்படுத்தி கள ஆய்வை மேற்கொண்டேன். தமிழகத்தில் 75,000 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 400 பூத்துகள் வரை இருக்கும். அதில், 1,000 வாக்காளர்களை தேர்ந்தெடுத்து யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டோம்.
முதல்வர் விஜய் ஆட்சிக்கு 100 மதிப்பெண்கள்
அதன்படியே தவெக 121 இடங்களை வெல்லும் என துல்லியமாக கணிக்க முடிந்தது. விஜய் என்னை பணி செய்ய அழைத்தால் செல்வீர்களா என்று பலர் கேட்கின்றனர். அவர் அழைத்தால் அப்புறம் பார்க்கலாம். மது கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம் என்று மக்களுக்கு தேவையானவற்றை விஜய் முதலில் செய்து உள்ளார். அரசியல் சார்பின்றி அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார். கடந்த 10 நாட்கள் ஆட்சி நடத்தியதை மதிப்பிடும் வகையில் முதல்வர் விஜய்க்கு நான் 100- க்கு 100 மதிப்பெண் வழங்குவேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “அமைச்சரவையில் பங்கேற்பது விசிகவின் தனிப்பட்ட உரிமை”.. கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிரடி!!