தவெக அமைச்சரவையில் பங்கேற்குமா விசிக?.. திருமாவளவன் சொல்வது என்ன?
புதிய அரசு பதவியேற்ற பிறகு, வேளச்சேரிக்கு வந்திருந்த தவெக தலைவர் விஜய், எங்களது கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தனது தனிப்பட்ட விருப்பத்தை என்னிடம் வெளிப்படுத்தினார். 'திருமாவளவன் எங்கே இருந்தாலும் அவரது உள்ளம் இங்குதான் இருக்கும்' என்று முன்பே புத்தக வெளியீட்டு விழாவிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று விடுத்திருந்த வெளிப்படையான அழைப்பு குறித்துச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருமாவளவன், “அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என்ற தவெக மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அன்பான அழைப்பிற்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிக்க: “அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் பங்குபெற வேண்டும்”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!!
விசிக உயர்நிலைக் குழுவின் முடிவு:
கடந்த 8-ஆம் தேதி மாலை விசிக-வின் உயர்நிலைக் குழு ஆன்லைன் மூலமாகக் கூடியது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், நாம் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தையே முன்மொழிந்தனர். இருப்பினும், இறுதி முடிவைத் தலைவரே எடுக்கலாம் என்று எனக்கு முழு அதிகாரத்தையும் வழங்கினர். அதன் அடிப்படையில், கடந்த 9-ஆம் தேதி கட்சியின் இரண்டு பொதுச்செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதற்காக மட்டுமே எங்களது 2 எம்எல்ஏக்களின் ஆதரவை ‘நிபந்தனையற்ற ஆதரவாக’ வழங்கினோம்.
விஜய்யின் தனிப்பட்ட விருப்பம்:
நாங்கள் தேர்தலை திமுக கூட்டணியில்தான் சந்தித்தோம். தவெக ஆட்சி அமைக்க 2 இடங்கள் தேவைப்பட்டதால், மட்டுமே எங்களது ஆதரவை நல்கினோம். எங்களது ஆதரவை ஒரு நிபந்தனையாக்கி, ‘அமைச்சர் பதவி கொடுத்தால் தான் ஆதரவு தருவோம்’ என்று நாங்கள் எந்தப் பேரமும் பேசவில்லை. புதிய அரசு பதவியேற்ற பிறகு, வேளச்சேரிக்கு வந்திருந்த தவெக தலைவர் விஜய், எங்களது கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தனது தனிப்பட்ட விருப்பத்தை என்னிடம் வெளிப்படுத்தினார். ‘திருமாவளவன் எங்கே இருந்தாலும் அவரது உள்ளம் இங்குதான் இருக்கும்’ என்று முன்பே புத்தக வெளியீட்டு விழாவிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: தவெகவை விடாது துரத்தும் ‘சோபா மாடல்’ விமர்சனம்.. சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ.. பரபரப்பு விளக்கம்!
இறுதி முடிவு எப்போது?
தற்போது தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் அமைச்சரவையில் இணையுமாறு அழைப்பு வந்துள்ளதால், இதனைத் தங்களது தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது என்று திருமாவளவன் குறிப்பிட்டார். இதற்காக மீண்டும் அவசரமாக உயர்நிலைக் குழுவைக் கூட்டத் தேவையில்லை என்றும், கட்சியின் இரண்டு பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொருளாளர் மற்றும் முதன்மைச் செயலாளர் ஆகிய முன்னணிப் பொறுப்பாளர்களுடன் அவசரமாகக் கலந்து பேசி, இந்த அழைப்பு குறித்த விசிக-வின் இறுதி முடிவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.