தவெகவை விடாது துரத்தும் ‘சோபா மாடல்’ விமர்சனம்.. சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ.. பரபரப்பு விளக்கம்!
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "சர்ச்சைக்குரிய அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் என்னுடைய வீடு அல்ல; அது எனது சொந்த அலுவலகம் என விளக்கமளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிதாகப் பதவியேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ். இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு வீடியோ வடிவில் அவர் அளித்துள்ள விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சமீபத்தில் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தனது தொகுதிப் பிரச்சினைகள் குறித்து அரசு பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தில், எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஒரு பிரம்மாண்டமான அரியணை போன்ற ஆடம்பரமான சோபா நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்கு முன்பாக ஆலோசனை நடத்த வந்த அரசு உயர் அதிகாரிகள் சாதாரண பிளாஸ்டிக் மற்றும் இரும்பு நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிக்க: நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. ஆளுநர் இன்று சென்னை வருகை.. யார் யாருக்கு வாய்ப்பு?
எம்எல்ஏவின் செயலுக்கு கடும் விமர்சனம்:
இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. மக்கள் பிரதிநிதிகள் தங்களை அதிகார வர்க்கமாகக் காட்டிக் கொள்ளாமல் எளிய மக்களோடு எளிமையாகப் பழக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. மேலும், திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள், “அரசு மேல் அதிகாரிகளைத் தன் வீட்டுக்கு வரவழைத்து ஆய்வு செய்ய இந்த சட்டமன்ற உறுப்பினருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தனர்.
கனிமொழி சந்தோஷ் வெளியிட்ட விளக்கம்:
எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்…
பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம்.… pic.twitter.com/ZebRnrG5jq— Kanimozhi Santhosh (@Kanimozhi_tvk) May 19, 2026
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சர்ச்சைக்குரிய அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் என்னுடைய வீடு அல்ல; அது எனது சொந்த அலுவலகம். நான் ஒரு ஜோதிடர் என்பதால், அந்தத் தொழிலுக்கான செட்டப்பில் அமைக்கப்பட்ட அலுவலகம் அது. அதிகாரிகள் அமர்ந்திருந்த நாற்காலிகள் சாதாரணமானவை அல்ல, அவை உயர்தர ‘பியூர் லெதர்’ நாற்காலிகள். எங்களிடம் வந்து பேசுபவர்களுக்கும் நாங்கள் அந்த அளவுக்குத் தரமான வசதியையே கொடுத்துள்ளோம்.”
சொந்த அலுவலகத்தில் நடந்த சந்திப்பு:
“நான் எந்தவொரு அரசு அதிகாரியையும் எனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்துவதை ஊக்கப்படுத்துவது கிடையாது. எனக்கும் அரசியல் நாகரிகம் என்ன என்பது நன்றாகவே தெரியும். தற்போது எனக்கான அரசு எம்எல்ஏ அலுவலகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டப் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அந்த இடைவெளியில் மக்களைச் சந்திப்பது விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தற்காலிகமாக எனது சொந்த அலுவலகத்தைப் பயன்படுத்தினேன். விரைவில் பணிகள் முடிந்ததும் அரசு அலுவலகத்திற்கு மாறிவிடுவேன்.”
பெண் அரசியல்வாதி மீதான தாக்குதல்:
“நான் எம்.எல்.ஏ ஆகி ஏதோ பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலப் பலர் தேவையின்றி விமர்சிக்கிறார்கள். என் மீது ஏன் இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. ஒரு பெண் வெளிப்படையாக அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்றுவது பலருக்குப் பிடிக்கவில்லையா அல்லது அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை.”
இதையும் படிக்க: முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஷாக்.. அரசு அதிகாரியின் செயலா?
‘சோபா மாடல்’ விமர்சனம்:
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்தே, அக்கட்சியைச் சுற்றி இந்த ‘சோபா’ குறித்த பேச்சுகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இதன் காரணமாக, எதிர்க்கட்சியான திமுக, தவெக அரசை ‘சோபா மாடல் அரசு’ என்று விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த விளக்கத்தின் மூலம் தனக்குக் கட்சித் தலைமையும், முதலமைச்சரும் கற்றுக்கொடுத்தபடி மக்களுக்காக மட்டுமே தொடர்ந்து உழைப்பேன் என்று கனிமொழி சந்தோஷ் உறுதியளித்துள்ளார்.