“அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் பங்குபெற வேண்டும்”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!!
இந்த ஜனநாயக விரோதச் சூழ்ச்சியை முறியடிக்கவே தேசிய மற்றும் மாநில அளவிலான மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்ததாக அவர் விவரித்தார். "தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை உணர்ந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உடனடியாகத் தனது ஆதரவைத் தவெகவிற்கு வழங்கினார்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அண்மை அரசியல் நகர்வுகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பான விளக்கங்களை அளித்துள்ளார். “முதலமைச்சர் விஜய் அவர்களின் முதன்மை விருப்பமே, அமையவுள்ள புதிய அமைச்சரவை ஒரு குடும்பத்தைப் போல இணக்கமாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். அதன் அடிப்படையில், எங்களது கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் அண்ணன் திருமாவளவன், ஐயூஎம்எல் மற்றும் காங்கிரஸ் தோழர்கள் அனைவரும் புதிய அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என்று தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளோம் என்றார். இது குறித்து கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் கலந்தாலோசித்து வருவதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிக்க: தவெகவை விடாது துரத்தும் ‘சோபா மாடல்’ விமர்சனம்.. சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ.. பரபரப்பு விளக்கம்!
திமுக – அதிமுக ரகசிய கூட்டு:
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் நிலவிய அசாதாரண அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய ஜனநாயக விரோதச் சூழ்ச்சி அரங்கேறியதாகக் குற்றம் சாட்டினார். “தேர்தலில் மக்கள் தவெகவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய போதிலும், அந்தத் தீர்ப்பைப் பின்பக்க வழியாக மாற்றியமைக்கத் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளும் கைகோர்த்தன. திமுக தலைவர்களான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய மூன்று பேரும் இணைந்து, தமிழ்நாட்டில் ஒரு குதிரை பேர அரசை உருவாக்கி, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்கக் கடைசி நிமிடம் வரை திட்டமிட்டனர். ஒருகட்டத்தில் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரவும் இவர்கள் தீவிர முயற்சி எடுத்தனர்” என்று அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தவெக கூட்டணி உருவான பின்னணி:
இந்த ஜனநாயக விரோதச் சூழ்ச்சியை முறியடிக்கவே தேசிய மற்றும் மாநில அளவிலான மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்ததாக அவர் விவரித்தார். “தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை உணர்ந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உடனடியாகத் தனது ஆதரவைத் தவெகவிற்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் மதச்சார்பற்ற கொள்கையை நிலைநிறுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமை மற்றும் தமிழகத் தோழர்களான சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் ஆதரவளித்தனர். இதனை வழிமொழிந்து அண்ணன் திருமாவளவனும் தவெகவிற்கு ஆதரவளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பேபி குறிப்பிட்டதைப் போல, நாங்கள் யாரும் ஆட்சி அதிகாரத்திற்காகவோ, பதவிக்காகவோ இங்கு ஒன்றிணையவில்லை; தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவே அண்ணன்-தம்பி பாசத்துடன் உறுதியாகத் திரண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
சி.வி.சண்முகம் அணிக்கு ஆதரவு ஏன்?
அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவளிப்பது குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் ஒரு குறிப்பிட்ட குடும்ப ஆட்சியை எதிர்ப்பதற்காகவே அதிமுகவை உருவாக்கினர். ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சியை டெல்லியிடம் அடமானம் வைத்தது மட்டுமன்றி, 14க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்து, இறுதியில் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக திமுகவிடமே கைகோர்த்தார். இது வரலாற்றுப் பிழை மற்றும் தற்கொலைக்குச் சமம் என்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்துள்ளனர்.”
இதையும் படிக்க: நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. ஆளுநர் இன்று சென்னை வருகை.. யார் யாருக்கு வாய்ப்பு?
“இதன் காரணமாகவே அக்கட்சிக்குள் ஒரு புதிய பிரிவு உருவாகி, அதை அண்ணன் சி.வி.சண்முகம் வழிநடத்துகிறார். அவர்கள் யாரும் அமைச்சர் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ வெளியே வரவில்லை; எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் கனவை நனவாக்கவும், அதிமுகவைக் காப்பாற்றவுமே தவெகவை ஆதரிக்கின்றனர். எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் தவெக தொண்டர்கள் எப்போதும் அதிமுக தொண்டர்களோடு அன்புடன் இருப்பார்கள். சி.வி.சண்முகம் தலைமையிலான அணியின் அடுத்தகட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்களை அவர்களே அறிவிப்பார்கள். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே வேண்டுகோள்” என்று அவர் கூறினார்.