டெண்டரில் முறைகேடு.. இணையத்தில் வெடித்த சர்ச்சை.. அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!
அவசரக் கால அல்லது குறுகிய கால ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடுவதற்கான எந்தவொரு அரசு நடைமுறைகளையும் அதிகாரிகள் பின்பற்றவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த விசித்திரமான செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இதில் பெரிய அளவில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் வெடித்தன.
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் விதிகளை மீறி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரண்டு அரசு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதுடன், அந்த சர்ச்சைக்குரிய டெண்டரையும் அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில், 2025-2026-ஆம் நிதியாண்டிற்கான 15-ஆவது நிதிக்குழுவின் கீழ், சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது.
இதையும் படிக்க: தவெகவை விடாது துரத்தும் ‘சோபா மாடல்’ விமர்சனம்.. சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ.. பரபரப்பு விளக்கம்!
டெண்டர் திறந்த சில நிமிடங்களிலேயே முடிவு:
பொதுவாக, இத்தகைய டெண்டர் அறிவிப்பானது திறக்கப்படும் நாள் முதலே இணையதளத்தில் நீண்ட நாட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த டெண்டர் கடந்த மே 12-ஆம் தேதியே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டிய விதிமுறை உள்ளது. ஆனால், விதிகளுக்கு மாறாக மே 19-ஆம் தேதிதான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நேற்று காலை 9 மணிக்கு ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டு, அன்றைய தினமே பிற்பகல் 3 மணிக்கு இணையதளத்தில் இருந்து அந்தப் பதிவு முழுமையாக நீக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது.
முறைகேடு நடந்ததாக புகார்:
சில மணி நேரங்கள் மட்டுமே இந்த டெண்டர் ஆன்லைனில் வைக்கப்பட்டிருந்ததால், தங்களுக்குச் சாதகமான சிலருக்கு மட்டும் இந்த ஒப்பந்தத்தை வழங்க அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு விதிமீறலில் ஈடுபட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அவசரக் கால அல்லது குறுகிய கால ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடுவதற்கான எந்தவொரு அரசு நடைமுறைகளையும் அதிகாரிகள் பின்பற்றவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த விசித்திரமான செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இதில் பெரிய அளவில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் வெடித்தன.
அமைச்சர் ஆனந்த் அதிரடி உத்தரவு:
இவ்விவகாரம் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசுபொருளாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் உடனடியாகத் தலையிட்டு நேற்று அவசர ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆய்வில் அதிகாரிகள் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு, அரசு விதிகளுக்கு மாறாகக் குறுகிய கால ஒப்பந்தப் புள்ளிக்கான எவ்வித முன் அனுமதியையும் பெறாமல், அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த ஒப்பந்த அழைப்பை விடுத்தது உறுதி செய்யப்பட்டது.
டெண்டரை ரத்து செய்த அரசு:
இதனைத் தொடர்ந்து, காரப்பேட்டையின் அந்த 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான டெண்டரை முழுமையாக ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு, முறைகேட்டிற்கு காரணமான காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் (AE) கயல்விழி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.சாந்தி ஆகிய இரு அதிகாரிகளையும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஷாக்.. அரசு அதிகாரியின் செயலா?
இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாகவும், வெளிப்படைத்தன்மையின்றியும் செயல்படும் அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என இந்த அதிரடி நடவடிக்கை மூலம் எச்சரித்துள்ளது.