தலைமையின் தவறான முடிவால் தள்ளாடும் அதிமுக.. தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள் பேச்சு!
MR Vijayabhaskar And C Vijayabaskar Join TVK : தலைமையின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடி வருவதாக அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினர். தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் இந்த கருத்தை முன் வைத்திருந்தனர்.
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக அந்தக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான எம். ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் சுமார் 15 ஆயிரம் பேருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு கட்சியின் தலைவர் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அதிமுக உள்ளது. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால், தொண்டர்களின் மனநிலையை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. உண்மையே எடுத்துக் கூறினால் அவர்களை துரோகி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி வருகிறார். நாங்கள் சேர்ந்து தேர்ந்தெடுத்தவர் தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடி வருகிறது.
தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம்
தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உருவாக்கி உள்ளார். இந்த மாற்றம் ஒரு தலைமுறை மாற்றமாகும். இது தமிழகத்தில் மட்டும் இன்றி இந்தியாவிலேயே அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் ஆட்சி போல இனி தமிழகத்தில் ஜோசப் விஜய் ஆட்சிதான் தொடரும். தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் ஓரிரு நாட்களில் கரூர் செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு தொண்டர்கள் அதில் இணைந்து இந்த ஏக்கம் தொடர்ந்து வெற்றி பெற உழைப்போம் என்று கூறினார்.
மேலும் படிக்க: “ஆட்சியை கவிழ்க்க திமுக தீவிர முயற்சி!”.. மு.க.ஸ்டாலின் மீது சிபிஎம் சண்முகம் சரமாரி குற்றச்சாட்டு!!




தவெகவுடன் கூட்டணி அமைக்குமாறு வலியுறுத்தல்
இவரை தொடர்ந்து, சி. விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால், கூட்டணி வைக்கப்படவில்லை. தொடர்ந்து, தேர்தல் முடிவுக்கு பின்னர் அந்த கட்சிக்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தினோம். ஆனால், அதிமுக தலைமை அதனை கேட்க மறுத்து விட்டது. எனவே, தமிழகத்தில் வருங்காலங்களில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெற்றி வரும்.
தவெக அரசின் மெயின் பிக்சர்
உறுதியான ஒற்றை தலைமையில் பயணித்து வெற்றி வாகை சூடுவோம், தொடர்ந்து பயணிப்போம், தொடர்ந்து உழைப்போம். இங்கு பார்ப்பது வெறும் டிரெய்லர் தான். தமிழக வெற்றிக் கழக தலைமையின் ஆதரவோடு மெயின் பிக்சரை டெல்டா மாவட்டத்தில் காட்டுவோம். அங்கே மீண்டும் ஒரு பிரம்மாண்ட இணைப்பு விழா நடத்த தயாராக உள்ளோம் என்று கூறினார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்.. செந்தில் பாலாஜி, அவரது தம்பியை வலைவீசி தேடும் போலீஸ்.. பெரும் பரபரப்பு!!