தவெக எம்எல்ஏக்கள் 15 பேருக்கு குறி? ரூ.35 கோடி பேரம்.. திமுக மீது நிர்மல் குமார் பெரும் குற்றச்சாட்டு!
Dmk Bargaining Tvk Mla: தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 15 எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி ரூபாய் பேரம் பேசி தங்கள் கட்சியில் இணை வைப்பதற்காக திமுக முயற்சித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களை திமுக பேரம் பேசி வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக 40 நாள்களாக முயற்சி நடைபெற்று வருகிறது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா மட்டும் இன்றி பல்வேறு எம்எல்ஏக்களிடம் திமுகவினர் தலா ரூ.50 கோடி வரை பேரம் பேசி உள்ளனர். தனது மகன் உதயநிதியை தூக்கி நிறுத்துவதற்காக குறுக்கு வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க முயற்சிக்கின்றார். தலைமைச் செயலகத்தில் எந்த கட்சியினரை சேர்ந்தவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கவில்லை. ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் ஆதங்கத்தில் தலைமைச் செயலகத்திற்கு வருகின்றனர். அவர்களை நாங்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைக்கிறோம். அந்த எம்எல்ஏக்கள் தாங்களாகவே ராஜினாமா செய்கின்றனர். நாங்கள் யாரையும் ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை. ராஜினாமா செய்வது அந்தந்த எம்எல்ஏக்களின் தனிப்பட்ட முடிவாகும். இதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது.
தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.35 கோடி பேரம்
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருக்கு எதிராக தீர்மானம் மற்றும் வாக்கெடுப்பு நடத்த தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களை ரூ.35 கோடிக்கு திமுக பேரம் பேசி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் சேரும் அதிமுகவினர் மீதான வழக்குகளில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம். மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஜோசப் விஜய் கூறவில்லை என்று தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம்.
மேலும் படிக்க: வெளியில் இருந்து மட்டும் ஆதரவு… முதல்வர் விஜய்யை சந்தித்த இடது சாரி கட்சி தலைவர்கள் பேட்டி




தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி
தமிழக வெற்றி கழக ஆட்சியை தவிர்ப்பதற்காக திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. மக்கள் தீர்ப்பை திமுக மற்றும் அதிமுக மதிக்கவில்லை. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதற்கு மு க ஸ்டாலின் துடித்து வருகிறார் என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது புகார்
தமிழக வெற்றி கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரான இளையராஜாவிடம் திமுக தரப்பை சேர்ந்த 3 பேர் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 15 எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்ட நிலையில், சுமார் 20 எம்எல்ஏக்கள் வரை குறி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: “மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பதா?”.. தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு விடுத்த ஓப்பன் வார்னிங்..