வெளியில் இருந்து மட்டும் ஆதரவு… முதல்வர் விஜய்யை சந்தித்த இடது சாரி கட்சி தலைவர்கள் பேட்டி
தமிழக வெற்றிக் கழக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த நிலையில், முதல்வர் விஜய் உடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெ.சண்முகம், வீரபாண்டியன் சந்தித்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்துக்கு தவெக விடுத்த அழைப்பை இடதுசாரிகள் நிராகரித்த நிலையில் இந்த சந்திப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
சென்னை, ஜூலை 1 : தமிழக வெற்றிக் கழக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த நிலையில், முதல்வர் விஜய் உடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெ.சண்முகம், வீரபாண்டியன் சந்தித்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்துக்கு தவெக விடுத்த அழைப்பை இடதுசாரிகள் நிராகரித்த நிலையில் சந்தித்துள்ளனர். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட கட்சிகள் விலகிய நிலையில் தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாக தவெக ஆதரவு கட்சிகளுடன் முதல்வர் தலைமையில் ஜூலை 1, 2026 மதியம் சந்திப்பு கூட்டம் நடைபெறவிருக்கிறது.
முதல்வர் விஜய்யுடன் இடது சாரி கட்சி தலைவர்கள் சந்திப்பு
இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது என அறிவித்தது தவெகவினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் முதல்வர் விஜய்யை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பெ.சண்முகம் மற்றும் வீரபாண்டியன் சந்தித்துள்ளனர். அப்போது, மக்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆகியோர் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து மனு அளித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு என உறுதியாக தெரிவித்தனர். இதனையடுத்து தவெகவின் புதிய கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையாது என்பது உறுதியாகியிருக்கிறது.




இதையும் படிக்க : குடும்பத்துடன் லண்டன் செல்லும் மு.க.ஸ்டாலின் – வெளியான முக்கிய தகவல்
முன்னதாக தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் விடுத்தனர் அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாளை தவெகவில் இணைகிறேன், புதிய உத்வேகத்துடன்… – சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு
தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்காகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்திருப்பது தவெகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த இடதுசாரி கட்சிகள், தற்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறப்பட்ட நிலையில் தவெக கூட்டத்தில் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை உருவாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணி அமைக்கும் முடிவில் முதல்வர் விஜய் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.