“மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பதா?”.. தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு விடுத்த ஓப்பன் வார்னிங்..
இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய அங்கமான கூட்டாட்சியின் அடிப்படை நோக்கம் என்பது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குரிய பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால், இந்த புதிய திட்டத்தின் மூலம் மாநிலங்களின் நிதிப் பங்களிப்பை மத்திய அரசு கட்டாயமாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை, ஜூலை 01: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான ‘விபி ஜிராம்ஜி‘ திட்டத்தில், மாநில நலன்களுக்கு எதிரான ஆபத்தான அம்சங்கள் இருப்பதாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது. நாடு முழுவதும் இன்று முதல் “வளர்ச்சியடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்” (VB-G RAM G – விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இத்திட்டத்தை “வளர்ச்சி அடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்ற பெயரில் செயல்படுத்துவதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவின் முக்கிய முகமும், முன்னாள் நிதியமைச்சருமான அமைச்சருமான தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், தற்போதைய தவெக அரசுக்கு மாநில உரிமைகளை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!




மகாத்மா காந்தி திட்டத்துடன் ஒப்பீடு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (MGNREGA) செயல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களின் நிதிச் சுமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள VB-G RAM-G திட்டத்தின் மூலம், மாநில அரசுகள் மீது கூடுதல் நிதிப் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. கூட்டாட்சியின்… https://t.co/8x7eygbkpy
— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) July 1, 2026
அவர் தனது பதிவில், “முன்பு நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (MGNREGA) செயல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களின் நிதிச் சுமை ஓரளவுக்குக் கட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால், தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் மூலம், மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிப் பொறுப்புகள் திட்டமிட்டுச் சுமத்தப்பட்டுள்ளன” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான போக்கு:
இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய அங்கமான கூட்டாட்சியின் அடிப்படை நோக்கம் என்பது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குரிய பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால், இந்த புதிய திட்டத்தின் மூலம் மாநிலங்களின் நிதிப் பங்களிப்பை மத்திய அரசு கட்டாயமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து தங்கம் தென்னரசு குறிப்பிடுகையில், “இத்தகைய நடவடிக்கை மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மையின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, மாநிலங்களின் நிதிச் சுயாட்சியை இது மேலும் பலவீனப்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார்.
தவெக அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை:
மாநிலத்தின் நிதி நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும் இத்தகைய ஒரு திட்டத்தை, தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக அரசு எந்தவித எதிர்ப்புமின்றி அப்படியே செயல்படுத்த முனைந்தால், அது தமிழ்நாட்டின் நிதி நலன்களையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்கத் தவறிய செயலாகவே முடியும்.
மேலும் படிக்க: இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!
எனவே, தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல், மாநிலத்தின் சுயமரியாதையையும் உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும். மாநில நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்கள் குறித்தும், தவெக அரசு உடனடியாக ஒன்றிய அரசிடம் தனது வலுவான எதிர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் வலியுறுத்தியுள்ளார்.