இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!
Mayiladuthurai Crime : மயிலாடுதுறை மாவட்டத்தில் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலையா அல்லது ஆணவ படுகொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் ( 20 வயது). இதே கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண். பார்த்திபன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த இளம் பெண் ஆதிக்க சாதிப் பிரிவை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சம்பவத்தன்று இரு குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஜாதி ரீதியாக பார்த்திபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம் பெண் வீட்டார் மீது காவல் நிலையத்தில் பார்த்திபன் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், பார்த்திபன் மற்றும் அந்த இளம் பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தோப்பில் அமைக்கப்பட்டிருந்த கூரை கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தனர்.
தற்கொலையா அல்லது ஆணவ படுகொலையா
இதனை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம முறையில் உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆணவ கொலையாக இருக்கலாமா அல்லது தற்கொலையா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: அரியலூர் – புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. விசாரணை வளையத்தில் சார்-பதிவாளர்!




பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும்
இதனிடையே, இருவரது காதல் விவகாரம் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், அண்மையில் இரு குடும்பத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பார்த்திபன் மற்றும் அந்த இளம் பெண் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது யாராவது அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்பது தெரியவரும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு
மேலும், இரு குடும்பத்தினரிடமும், அவர்களது வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண் தூக்கில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!