AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்.. செந்தில் பாலாஜி, அவரது தம்பியை வலைவீசி தேடும் போலீஸ்.. பெரும் பரபரப்பு!!

சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இதுகுறித்துக் கூறுகையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் முழு அனுமதியோடுதான், செந்தில் பாலாஜி கடந்த 40 நாட்களாக எங்களது பல எம்.எல்.ஏ-க்களை ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசி இழுக்க முயன்றுள்ளார். அவர்களின் ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டுள்ளது" என்று சாடியுள்ளார்.

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்.. செந்தில் பாலாஜி, அவரது தம்பியை வலைவீசி தேடும் போலீஸ்.. பெரும் பரபரப்பு!!
செந்தில் பாலாஜி, கைதான நபர்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Jul 2026 13:09 PM IST

சென்னை, ஜூலை 02: தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழக’ அரசு பதவியேற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினரைக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இழுக்க முயன்றதாக எழுந்துள்ள புகார், மாநில அரசியலில் பெரும் புயலையும், சட்ட ஒழுங்கு அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கு அண்மையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் ‘இந்தியன் பொலிட்டிக்கல் டெமாக்ரடிக் ஸ்ட்ரேட்டஜிஸ்’ (IPDS) என்ற அரசியல் ஆய்வு அமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரு முக்கிய எதிர்க்கட்சியின் சார்பாகப் பேச விரும்புவதாகக் கூறிச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பின்னடைவு.. சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

விவகாரத்தின் பின்னணி என்ன?

பின்னர், சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்’ போது, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல், தீர்மானத்திற்கு ஆதரவாகவோ அல்லது கட்சி மாறியோ வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதற்குச் சம்மதித்தால் கைமாறாக ரூ.35 கோடி தருவதாகப் பேரம் பேசப்பட்டுள்ளது.

கொலை மிரட்டலும், புகாரும்:

எம்.எல்.ஏ இளையராஜா இந்த பேரத்தை உடனடியாக நிராகரித்து, தமக்கு இத்தகைய எண்ணம் இல்லை எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் எம்எல்ஏ-வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படும் எனத் தொடர் கொலை மிரட்டல்களை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜிடம் இளையராஜா முறைப்படி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி (D1) காவல் நிலையத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதிரடி கைதுகளும், செந்தில் பாலாஜி தொடர்பும்:

விசாரணையில் இறங்கிய சென்னை தனிப்படை போலீசார், முதற்கட்டமாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் நரேஷ் (என்ற ரமேஷ்) மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரையும் கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்தனர். தொடர்ந்து கரூரில் நடத்திய சோதனையில் கார்த்திக் உட்பட மேலும் சிலரும் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நரேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இந்த பேரத் திட்டத்திற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் கரூரில் உள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் வீட்டில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் நேரடி வழிகாட்டுதலின் பேரில் தான், தவெக எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டதாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விஜய்யின் கரூர் பயணமும் – தவெகவின் பதிலடியும்:

முதலமைச்சர் விஜய் கரூருக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் கோட்டையான கரூரிலேயே இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தவெகவின் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இதுகுறித்துக் கூறுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் முழு அனுமதியோடுதான், செந்தில் பாலாஜி கடந்த 40 நாட்களாக எங்களது பல எம்.எல்.ஏ-க்களை ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசி இழுக்க முயன்றுள்ளார். அவர்களின் ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டுள்ளது” என்று சாடியுள்ளார்.

மேலும் படிக்க: ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது FIR பதிவு.. வெளியான ஷாக் விவரங்கள்!!

திமுகவின் எதிர்காப்புப் புகார்:

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திமுக, தவெக தரப்புதான் தங்களது இரண்டு எம்எல்ஏ-க்களைப் பதவி விலகச் சொல்லி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தவெக தலைவர் விஜய்க்கு எதிராகப் புகார் அளித்துள்ளது. தற்போது, தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மற்றும் இந்த சதியின் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்களைப் பிடிக்க சென்னை தனிப்படை போலீசார் கரூரில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் சொகுசு விடுதிகளில் முகாமிட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சேகரிக்கப்பட்டுள்ள தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காரணமாகத் தமிழக அரசியலில் அடுத்தடுத்துப் பெரிய கைதுகள் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us