ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது FIR பதிவு.. வெளியான ஷாக் விவரங்கள்!!
நாங்கள் சொல்வது போல் நடந்துகொண்டால் தான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. இல்லையெனில் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த பேரம் பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள்" என்று மிரட்டியதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 02: தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக சட்டமன்ற உறுப்பினரிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில், தற்போது முதல் தகவல் அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன. தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த எஃப்.ஐ.ஆரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன் மற்றும் ‘மேலும் சிலர்’ எனப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வைகோவிடம் வருத்தம், ப.சிதம்பரத்துடன் ரகசிய ஆலோசனை.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி!!
எஃப்.ஐ.ஆரில் உள்ள அதிரடி பின்னணி:
வெளியாகியுள்ள எஃப்.ஐ.ஆர் விபரங்களின்படி, சென்னையில் ‘IPDS’ என்ற பெயரில் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர், தவெக எம்.எல்.ஏ இளையராஜாவைத் தொடர்பு கொண்டுள்ளார். ஒரு முக்கிய அரசியல் கட்சியின் பிரமுகர்கள் சொன்னதன் பேரில் தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். “சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரும்போது, அதற்கு ஆதரவாக நாங்கள் சொல்வது போல் நீங்கள் வாக்களித்தால் போதும், உங்களுக்கு ரூ.35 கோடி கிடைக்கும்” என்று திருநாவுக்கரசு பேரம் பேசியுள்ளார். இதற்கு எம்.எல்.ஏ இளையராஜா மறுப்பு தெரிவித்து, ‘இனிமேல் பேசாதே’ எனக் கூறியுள்ளார்.
“உயிரோடு இருக்க மாட்டீங்க” – கொலை மிரட்டல்:
எம்.எல்.ஏ மறுத்ததைத் தொடர்ந்து திருநாவுக்கரசு ஆசை வார்த்தைகளையும், கடுமையான கொலை மிரட்டல்களையும் விடுத்துள்ளார். “நீங்கள் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு பெரிய தொகை இது. நாங்கள் சொல்வது போல் நடந்துகொண்டால் தான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. இல்லையெனில் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த பேரம் பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள்” என்று மிரட்டியதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுகவிற்கு விழுந்த பலத்த அடி!!.. முடிவுக்கு வந்த 9 ஆண்டுகால மெகா கூட்டணி.. மு.க.ஸ்டாலினின் அடுத்த வியூகம் என்ன?
அடுத்தடுத்து பாயும் போலீஸ் நடவடிக்கை:
இந்த விவகாரத்தில் இதுவரை திருநாவுக்கரசு உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கரூரில் கைதான செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை நள்ளிரவில் போலீசார் சென்னைக்குக் கொண்டு வந்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்துத் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிருஷ்ணன் என்பவரிடமும் விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கில் இன்னும் பலர் சிக்கக்கூடும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.