திமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. “மா.செ. தேர்தலைத் தள்ளிப்போடுங்க!”.. மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி மோதல்!!
DMK Internal Election Crisis: திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கனிமொழி வலியுறுத்தி வரும் நிலையில், மாவட்ட செயலாளர் தேர்தலை தள்ளிவைத்துவிட்டு தற்காலிக பொறுப்பாளர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உட்கட்சித் தேர்வை நடத்துவதில் திமுக தலைமைக்கு முக்கோண சிக்கல் எழுந்துள்ளது.
சென்னை, செப்.04: திமுகவில் உட்கட்சித் தேர்தல் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்த விவகாரம் தற்போது அறிவாலய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஒரு மாவட்ட செயலாளர் 3 முறை மட்டுமே பதவியில் இருக்கலாம், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110 ஆக உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் காரணமாக 70 வயதைக் கடந்த 13 மூத்த மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்கும் சூழல் உருவானது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாம்புக்கடி உயிரிழப்புகள்.. 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!!
மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி, உதயநிதி:
மாவட்ட செயலாளர்கள் தேர்வில் திமுக தலைமைக்கு தற்போது முக்கோண நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது ஆதரவாளர்களுக்கு மா.செ. பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க, மறுபுறம் இளைஞர் அணி சார்பில் தகுதியான இளைஞர்களின் பட்டியலை உதயநிதி ஸ்டாலின் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே, தங்களுக்குப் பதிலாகத் தாம் கை காட்டும் நபர்களுக்கே பொறுப்புகளை வழங்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் பிடிவாதம் காட்டி வருகின்றனர். இதனால் புதிய மாவட்ட செயலாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது.
தேர்தலை தள்ளிப்போட மூத்த நிர்வாகிகள் திட்டம்:
தற்போது அறிவாலய வட்டாரத்தில் கசிந்துள்ள தகவலின்படி, கிளை, பேரூர், ஒன்றியம் மற்றும் நகர அளவிலான உட்கட்சித் தேர்தல்களை மட்டும் நடத்திவிட்டு, மாவட்ட செயலாளர்கள் தேர்தலைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்குப் பதிலாக மாவட்டங்களுக்குத் தற்காலிகப் பொறுப்பாளர்களை மட்டும் நியமித்தால் போதுமானது என்பது அவர்களின் கணக்காக உள்ளது. ஏனெனில், தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் எதிர்ப்பால் மூத்த நிர்வாகிகளோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ வெற்றி பெற முடியாது; பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்வாகிகளைச் சரிசெய்து விடலாம் என அவர்கள் நினைக்கின்றனர்.
இதையும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிக்கொலை.. சகோதரர் காவல் நிலையத்தில் சரண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
உடனடியாகத் தேர்தல் நடத்த வலியுறுத்தல்:
ஆனால், மூத்த நிர்வாகிகளின் இந்த யோசனைக்கு எதிராக கனிமொழி குரல் கொடுத்து வருகிறார். உட்கட்சித் தேர்தலோடு சேர்த்து மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் தொண்டர்களும் நிர்வாகிகளும் தாம் விரும்பும் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அவர் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றார். அனுபவமிக்க மூத்த நிர்வாகிகளின் பேச்சைக் கேட்பதா அல்லது நியாயமாகப் பேசும் கனிமொழியின் கருத்தை ஏற்பதா என்று தெரியாமல் திமுக தலைமை திணறி வருகிறது. மேலும், தேர்தல் நடத்தப்பட்டால் கட்சிக்குள் மோதல் வெடித்துப் பெயர் கெட்டுவிடுமோ என்ற அச்சத்திலும் தலைமை தீவிர யோசனையில் ஈடுபட்டுள்ளது.