தமிழக உரிமைக்கான தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டும்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
TVK Government : தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தவெக அரசு ஊசலாட்டம் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக்கூடிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த திமுக ஆட்சியில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்கள் மீது அப்போதைய ஆளுநர் ஆர். என். ரவி எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்த 10 மசோதாக்களில் தமிழகத்தில் இயங்கும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநருக்கு பதிலாக மாநிலத்தின் முதல்வரே வேந்தராக இருப்பார் என்ற மசோதாவும் ஒன்றாகும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
மசோதாக்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
ஆளுநர் திருப்பி அனுப்பிய அதே மசோதாவை சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஒரு வேளை இந்த மசோதா குடியரசு தலைவர் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதா குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குடியரசுத் தலைவர் பெயரால் மத்திய அரசு இந்த உத்தரவு குறித்து விளக்கம் கேட்டு மனு அளித்தது.
மேலும் படிக்க: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடம் ரூ.4 ஆயிரம் கையூட்டு பெற்ற அர்ச்சகர்.. வசமாக சிக்கியது எப்படி!




மாநில உரிமைகளுக்கான தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டும்
இதைத் தொடர்ந்து பெரும்பாலான அரசியல் சட்ட விவாதங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அப்போதைய கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் வரவேற்று இருந்தார். இதன் பின்னணியில் முதல் அமைச்சரே பல்கலைக்கழக வேந்தர் என்பதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. ஆனால், அவர் தான் அப்படி கூறவில்லை என்றும், முதல்வர் தான் முடிவு எடுப்பார் என்றும் கூறியதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது
மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று பெறப்பட்ட தீர்ப்பை தமிழக வெற்றிக்கழக அரசு செயல்படுத்த முன் வர வேண்டும். மாநிலங்களில் அரசு மாறலாம். ஆனால், மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகள் ஆகும். இதில், சமரசத்திற்கு இடம் இல்லை. மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சரிடம் தரிசனத்துக்கு லஞ்சம்: இருவர் பணி நீக்கம் – அர்ச்சகர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்!