ஒரே நாளில் தவெகவில் இணையும் 3 அதிமுக முன்னாள் எம்எல்ஏகள் – பரபரப்பு தகவல்
சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் ஒரே நாளில் அதிமுகவை சேர்ந்த 3 முன்னாள் எம்எல்ஏகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, மே 29 : கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் அதிமுகவை சுற்றி நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என 2 அணிகளாக பிரிந்தனர். இதில் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினர் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்களை கட்சியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கினார். இந்த நிலையில் சி.வி.சண்முகம் தவிர்த்து பிற எம்எல்ஏகள் எடப்பாடியை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஒரே நாளில் தவெகவில் இணையும் 3 அதிமுக முன்னாள் எம்எல்ஏகள்
இந்த நிலையில் சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல் வெளியாகி வந்தது. இதற்கிடையில் ஒரே நாளில் அதிமுகவை சேர்ந்த 3 முன்னாள் எம்எல்ஏகள் தவெகவில் இணையவுள்ளனர். கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நார்த்தமலை ஆறுமுகம் தவெகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து ஜெயம்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், அரக்கோணம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவி ஆகியோர் தவெகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : தமிழக சட்டமன்ற கூட்டம் ஜூலையில் கூடுகிறது.. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?




தவெகவில் இணையவிருப்பதாக அறிவித்த பெங்களூரு புகழேந்தி
மற்றொரு பக்கம் பெங்களூரு புகழேந்தி தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்தை சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் தவெகவில் இணையப்போகிறேன். அமைச்சர் ஆனந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒரு சில நாட்களில் அதிமுக எம்எல்ஏகள் சிலர் தவெகவில் இணையவிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியை விட்டு விரைவில் அனைவரும் வெளியேறிவிடுவார்கள் என்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த புகழேந்தி, பின்னர் அமமுகவில் இணைந்து கர்நாடக மாநில செயலாளராக இருந்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் இருந்தார். இந்த நிலையில் திடீரென விலகி புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த 2026, மார்ச்சில் தொடங்கினார். இந்த நிலையில் தற்போது தவெகவில் இணையவுள்ளதாக அறிவித்து அதிர்ச்சியளித்திருக்கிறார்.
இதையும் படிக்க : அதிமுகவின் கூடாரம் காலியாகிறதா? முன்னாள் எம்.பி. இளவசன் எடுத்த திடீர் முடிவு!
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அதிமுகவில் இருந்து விலகி கடந்த மே 27, 2026 அன்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்ததை சந்தித்து தவெகவில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.