திருச்சி செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்.. விமான நிலையம் முதல் சத்திரம் வரை சாலை வலம்.. நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேச்சு!
CM Vijay Road Show : திருச்சியில் விமான நிலையம் முதல் சத்திரம் வளனார் கல்லூரி வரை முதல்வர் ஜோசப் விஜய் சாலை வலம் மேற்கொள்ள உள்ளார். இதைத் தொடர்ந்து, திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை மாவட்டத்தில் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி ஆகியவற்றில் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டு இருந்தார். இதில், இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி உள்பட 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதற்காக அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்காக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தூய வளவனார் கல்லூரி மைதானத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விமான நிலையம் முதல் சத்திரம் வரை சாலை வலம்
நாளை திங்கள்கிழமை ( ஜூன் 1- ஆம் தேதி) நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து பிரத்தியேக வாகனத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி புதுக்கோட்டை சாலை, சுப்பிரமணியபுரம், டி. வி. எஸ். சோதனை சாவடி, பழைய பால்பண்ணை, திருச்சி – சென்னை புறவழி சாலை, சஞ்சீவி நகர், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சாலை வளம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சிங்கப்பெண் அதிரடிப்படை – 18 காவல்துறையினர் நியமனம்




நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சு
இதை தொடர்ந்து, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக தூய வளனார் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைகிறார். அங்கு, மாலை 4 மணி அளவில் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அங்கு முதல்வர் விஜய் ஓய்வு எடுப்பதற்காக விழா மேடைக்கு அருகே தனியாக 3 ஏசி வசதி உடைய குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.
திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல்
அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த தொகுதி உட்பட பிற தொகுதிகளில் தவெக வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜய் நாளை திருச்சி செல்ல உள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “ஊழல் செய்யாமல் வேலை செய்ய வந்துள்ளோம்; கொஞ்சம் டைம் கொடுங்க!”.. அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!